கபாலி படம் வெளியான தினத்திலிருந்தே அந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்களும் மிக பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடும் ரஜினிகாந்த் பேசும் வசனங்களும், வில்லனை எதிர்த்து ரஜினிகாந்த் பேசும் வசனங்களும் சமூக வலைத்தளங்களிலும் பலத்த கருத்து மோதல்களையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக காந்தி கோட் போடாததற்கும், அம்பேத்கார் கோட் போட்டதற்கும் பின்னாடி ஒரு அரசியல் இருக்கு, “நீங்கள் ஆண்ட பரம்பரைடா, இனி நாங்கள் ஆளப் பிறந்தவங்கடா”, “நாங்கள் கோட்சூட் போட்டால் உங்களுக்குப் பிடிக்காதா, முன்னேறினா உங்களுக்குப் பிடிக்காதுன்னா சாவுங்கடா”, போன்ற வசனங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
கபாலி படத்தில் ரஜினிகாந்தும் ஒரு காட்சிக்கு வசனம் எழுதியுள்ளார் என்ற தகவலை படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். மலேசியாவில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சீனர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று ஆங்கிலேய தோட்ட முதலாளியிடம் ரஜினிகாந்த் உணர்ச்சி பொங்க பேசும் காட்சியில் இடம் பெற்றுள்ள ஆங்கில வசனத்தை ரஜினிகாந்த் எழுதியுள்ளார். “அந்த வசனத்தை நான் முதலில் தமிழில் எழுதியிருந்தேன். அதைப் படித்துப் பார்த்த ரஜினிகாந்த் சார், அவரே அதை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பேசினார்,” என்ற தகவலை ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அறிமுகமான நாளிலிருந்தே, தமிழை ஒரு வித ஸ்டைலில் பேசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரஜினிகாந்த் பேசும் ஆங்கில வசனங்களுக்கும் படங்களில் கைதட்டல் கிடைப்பதுண்டு. அதை இதற்கு முன் வெளிவந்த பல படங்கள் உதாரணம். தற்போது கபாலி படத்தில் ரஜினி பேசும் அந்த ஆங்கில வசனமும் கைத்தட்டலைப் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments