அரசு மருத்துவமனையில் 12 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால், தந்தையின் தோளிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் ஃபாசல்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார். இவரது 12 வயது அன்ஷ். இவருக்கு கடந்த ஞாயிறு இரவு, கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகிலுள்ள மருத்துவர்களிடம் அனுஷ்க்கு சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் காய்ச்சல் தொடர்ந்து நீடிக்கவே, கான்பூரின் மிகப்பெரிய மருத்துவமனையான லாலா லஜ்பதிராய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் தனது மகனை உடனடியாக அனுமதிக்குமாறு, மருத்துவர்களிடம் கெஞ்சியுள்ளார். அரை மணி நேரம் சோதனை செய்த மருத்துவர்கள், அருகிலுள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சலால் அவதிப்பட்ட சிறுவனை, குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, படுக்கை வசதி செய்துதருமாறு சுனில் கேட்டுள்ளார். ஆனால் எந்தவித வசதிகளும் செய்துதரப் படாததால், தனது மகனை தோளிலேயே சுமந்து கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் அன்ஷின் உடல்நிலை மோசமாகி, தனது தந்தையில் தோளிலேயே உயிரிழந்துள்ளார். இதனை குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுனில், அழுதுகொண்டே தனது மகனை தோளில் சுமந்து கொண்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். அவருக்கு வழியில் கூட யாரும் உதவி செய்யாதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக கருதப்படும் இந்தியாவில், பொதுமக்களுக்கு போதிய மருத்துவ வசதி கூட பெறமுடியாத சூழல் மிகவும் வருத்தத்திற்குரியது. கடந்த 2015ம் ஆண்டு தேசிய சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், 11,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இந்தியாவில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒடிசா மாநிலம் பவானிபட்னா மாவட்டத்தில் ஏழை தொழிலாளியின் மனைவி எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி அளிக்கப்படாததால், அவரை 10 கி.மீ தூரம் கணவர் தனது தோளிலேயே சுமந்து சென்ற சம்பவத்தின் காயம் ஆறுவதற்குள், மீண்டும் ஒரு துயரம் அரங்கேறியுள்ளது.

No comments:
Write comments