சமீபத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிகார் பாகிஸ்தான் நாட்டை நரகத்தோடு ஒப்பிட்டு பேசினார். பாகிஸ்தானிற்கு செல்வதும் நரகத்திற்கு செல்வதும் ஒன்றுதான் என அவர் கருத்து தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த முன்னாள் காங்கிரஸ் எம்.பியும் கன்னட நடிகையுமான ரம்யா இதற்கு கண்டனம் தெரிவித்தார்.
நடிகை ரம்யா கூறியதாவது "பாகிஸ்தான் நாட்டை நரகத்தோடு ஒப்பிட்டு பேசுவது கண்டனத்திற்குரியது. அங்குள்ள மக்களும் நம்மை போன்றவர்களே!. நாம் அங்கு சென்றிருந்த போது நன்றாகவே நமக்கு மதிப்பளித்தார்கள்" என கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பாகிஸ்தானிற்கு ஆதரவாக பேசினார் என குற்றஞ்சாட்டப்பட்டு விட்டல் கெளடா என்ற வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்படவேண்டுமென அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த நடிகை ரம்யா "மன்டியாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை. நான் மீண்டும் சொல்கிறேன் மத்திய அமைச்சர் பாகிஸ்தானிற்கு எதிராக கூறிய கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது. சார்க் மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்ட போது நல்ல முறையிலேயே அவர்கள் நடந்து கொண்டார்கள். என் மனதில் உள்ளதை தான் நான் தெரிவித்தேன். என் மனதில் உள்ளதை தெரிவிக்க எனக்கு எந்த பயமோ, தயக்கமோ இல்லை." என தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது "இதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். தன்னுடைய கருத்தை தெரிவிப்பதற்கு ஜனநாயக நாட்டில் உரிமை இருக்கிறது. எனது தரப்பில் தவறு இருக்கும் பட்சத்தில் மன்னிப்பு கேட்க தயாராகவே உள்ளேன். ஆனால் இவ்விவகாரத்தில் நான் மன்னிப்பு கோரப்போவதில்லை. பா.ஜ.க தலைவர்கள் பலரும் விஷமத்தனமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராகவும் வழக்குகள் தொடுக்க முடியும். ஆனால் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகள் ஏராளமாக இருப்பதால், அவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை. கொலை குற்றங்களில் ஈடுபடுபவர்களும், வகுப்பு வாத பிரச்சனைகளை தூண்டுபவர்களும் சுதந்திரமாக திரிகிறார்கள்" என ரம்யா தெரிவித்தார்.

No comments:
Write comments