நீண்ட இடைவேளைக்குப் பின் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்த வடிவேலு நாயகனாகவே இரண்டு படங்களில் தொடர்ந்தார். ஆனால், இரண்டுமே எதிர்பார்த்தபடி போகாததால் காமெடியனாகவே மீண்டும் களம் புகுந்த ‘கத்திசண்டை’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். விஷால், தமன்னா, சூரி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் - ரித்திகா சிங் நடிப்பில் உருவாகும் ‘சிவலிங்கா’ படத்திலும் காமெடியனாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் சந்தானத்தை வைத்து ‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் தான் கையில் வைத்துள்ள படங்கள் நடித்து முடிந்த பிறகு இப்படத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர்கள் தேர்வை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தற்போது இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியுள்ள செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கதாநாயகனாக நடிப்பேன் என இல்லாமல் காமெடியனாக மீண்டும் தன்னை மீண்டும் மாற்றிக் கொண்டதால் வடிவேலுவுக்குப் பட வாய்ப்புகள் கூடி வந்து கொண்டிருக்கிறது. தமிழில் நீண்ட காலமாக நகைச்சுவை நடிகருக்கான வெற்றிடத்தை நிச்சயம் நிரப்புவார் என்றே எதிபார்க்கப்படுகிறது

No comments:
Write comments