காவேரியில் தண்ணீர் திறந்துவிட்டது போதாது என தமிழக பா.ஜ.க கூற, ஏன் திறந்துவிட்டாய், உடனே பதவி விலகு என கர்நாடக பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கர்நாடக திறந்துவிட்ட காவேரி நீர் சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இல்லை என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழிசை கூறும்போது "உச்ச நீதிமன்றம் கொடுத்த நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே கர்நாடக அரசு காவேரி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட்டிருக்கிறது. இது கஷ்டத்தில் சிக்கியவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் போன்றதே. நிவாரணத்தை வைத்துக்கொண்டு எப்படி முழு வாழ்க்கையையும் நடத்த முடியாதோ அது போல கர்நாடகம் வழங்கியிருக்கும் இந்த தண்ணீர் சாகுபடி செய்வதற்கு போதுமானது கிடையாது.
தமிழக விவசாயிகள் சம்பா சாகுபடி செய்வதற்கு இந்த தண்ணீர் போதுமானது கிடையாது. காவேரி ஆற்றின் மீது இரு மாநிலத்திற்கும் உரிமை உண்டு. தண்ணீர் கேட்பதற்கு கூட நீதிமன்றத்தை முறையிடவேண்டுமென்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி இப்பிரச்சனைக்கு நிரந்தர முடிவு காண வேண்டும். கர்நாடகாவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் அனைத்தும் தேசத்திற்கு விரோதமானது என தமிழிசை தெரிவித்தார்.
அதே சமயத்தில் பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தமிழக அரசு காவேரி தண்ணீருக்காக புலம்பிக்கொண்டிருக்க கூடாது என்றும் கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தை அதிகப்படுத்தி விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை அதிலும் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தராமையா பதவி விலக வேண்டுமென கர்நாடக பா.ஜ.க வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments