யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) இணைந்து நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் அதிகமான சர்க்கரை பயன்படுத்தும் தயாரிப்புகள் மீது வரியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். வருகிற 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் கூட்டத்தில் கடினமான வரியை அமல்படுத்த வேண்டும் என்று பாபா ராம்தேவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தியாவில் இயங்கிவரும் கோக-கோலா மற்றும் பெப்சிகோ ஆகிய நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
100 மில்லி லிட்டர் கோக-கோலாவில் 10.6 கிராம் சர்க்கரை இருக்கிறது. அதேபோல 250 மில்லி லிட்டர் குளிர்பான பாட்டிலில் 26.5 கிராம் சர்க்கரை உள்ளது. இந்நிலையில் இதுபோன்ற அதிகமாக கார்பனேற்றிய பானங்கள் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதிகள் நிதி அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளனர். மேலும், இந்த பானங்களை அருந்தினால் மக்களுக்கு அதிகமான உடல் உபாதைகள் ஏற்படும் என்றும், இவற்றைக் கட்டுப்படுத்தவோ அல்லது அதற்கேற்றபடி அதிகமான வரியை விதிக்கவோ வேண்டும் என்று இவர்கள் புகார் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குளிர்பானங்கள் மற்றும் புகையிலை பொருட்கள் மீது அதிகப்படியான வரியாக 40 சதவிகிதம் வரியை அமல்படுத்த வேண்டும் என்று ஜி.எஸ்.டி. குழுவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் பரிந்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாபா ராம்தேவின் இச்செயலால் பதஞ்சலி நிறுவனம் அதிவிரைவில் குளிர்பானங்கள் தயாரிப்பில் இறங்கலாம் என்று கருதப்படுகிறது.

No comments:
Write comments