இந்துத்துவா கொள்கைகள் நரகத்திற்குத்தான் செல்லும் என தலித் தலைவர் ஜிக்னேஷ் மேர்வானி ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தலித் பேரணியில் பங்கேற்றுவிட்ட குஜராத் திரும்பிய ஜிக்னேஷ் மேவானியை காவல்துறையினர் கைது செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி தனது 66வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நிகழ்ந்துவிடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலித் தலைவர் ஜிக்னேஷ் மேர்வானி, படிதர் அனாமத் அன்டோலன் சமிதி அமைப்பின் தலைவர் ரேஷ்மா படேல், 400 தலித் இயக்க உறுப்பினர்கள் மற்றும் படிதர் அமைப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக டெல்லியில் நடைபெற்ற தலித் சுவாபிமான் சங்கர்ஷ் பேரணியில் கலந்து கொண்ட ஜிக்னேஷ் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது "இந்துத்துவா சித்தாந்தங்கள் நரகத்திற்கு செல்லட்டும். இன்றைய பா.ஜ.க அரசு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு விரோதமான அரசாக செயல்பட்டு வருகிறது. கார்பரேட் கம்பெனிகளை நம்பி அரசியல் நடத்துபவர்களுக்கு மட்டுமே பொற்கால ஆட்சியாக இது திகழ்கிறது. நாங்கள் தொழிலாளர்களின் உரிமைக்காக எங்கள் இதயத்திலிருந்து குரல் கொடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.
குஜராத்தை வளர்ந்த மாநிலமாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதுவோ முற்றிலும் சீரழிந்து வருகிறது. குஜராத்தில் முதலமைச்சராக மோடி பொறுப்பேற்ற போது அம்மாநிலத்தின் மீது 25 ஆயிரம் கோடி கடன் இருந்தது. தற்போது அது 1.80 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 90,000 கோடி நர்மதா அணைக்காக மட்டும் செலவிடப்பட்டிருக்கிறது. இருந்தும் குஜராத்தில் 50% மக்களுக்கு குடி நீர் வசதி கிடையாது என அவர் தெரிவித்தார்.
தலித்களுக்குண்டான உரிமையை இந்த அரசு வழங்க வேண்டும், இல்லை என்றால் இரயில் மறியல் போராட்டம் நடத்த வேண்டியது வரும் என எச்சரித்த அவர், சங்கப்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும், பசு காவலர்களுக்கு எதிராகவும், நரேந்திர மோடிக்கு எதிராகவும் மிகப்பெரும் எழுச்சி அலையை ஏற்படுத்த வேண்டும். இவர்கள் தான் இந்திய சமூகத்தை பிளவுபடுத்தி வருகின்றனர் என பேசினார்.

No comments:
Write comments