திரைப்படத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது என்றும் சினிமா பாடல்களில் ஆபாசம் இருக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார் என்பவர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவில், “16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து கேலி, கிண்டல் செய்து அசிங்கமாக பேசியதாக என் மீது மணலி போலீஸார் வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 24-ம் தேதி கைது செய்தனர். என் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் தரவேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், தனது தாயாருடன் ரோட் டில் நடந்து சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுமியைப் பார்த்து ‘‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? இல்லை ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்க லாமா?’’ என கேலி செய்யும் விதமாக பிரபுகுமார் சினிமா பாட்டை பாடியுள்ளார். இதை தட்டிக்கேட்ட இருவரையும் தாக்கியது மட்டுமல்லாமல், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.
மனுதாரர் சினிமா பாடலை மட்டும்தான் பாடியுள்ளார். அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் உள்நோக்கம் இல்லை. மேலும் அவர் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் சிறையில் உள்ளார். எனவே அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கிறேன். ரூ. 10 ஆயிரம் செலுத்தி, அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெறலாம். மறுஉத்தரவு வரும் வரை அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
அதேநேரம், சினிமா பாடல்கள் ஆபாசமாக இருக்கக்கூடாது. திரைப்படத் துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது. இளைய சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான சினிமா படங்கள் மற்றும் அவற்றில் இடம்பெறும் பாடல்களில் வன்முறையும், ஆபாசமும் தான் மேலோங்கி நிற்கிறது. நம்முடைய கலாச்சாரமும், அறநெறியும் இதன் மூலம் சீரழிந்து வருகிறது. சினிமா மிகப்பெரிய ஊடகமாக உள்ள இக்காலகட்டங்களில் ஒரு ஆசானாக, குருவாக இருந்து நல்ல விசயங்களை மட்டும் போதிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Write comments