உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றினைந்து சவுதி அரேபியா அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதோடு அவர்களை தண்டிக்க வேண்டுமென ஈரான் நாட்டு அதிபர் ஹசன் ரோஹானி தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டு பத்திரிகையான 'இர்னா' வெளியிட்டுள்ள செய்தியில் அந்நாட்டு அதிபர் ஹசன் ரோஹானி தெரிவித்துள்ளதாவது "அனைத்து இஸ்லாமிய நாடுகளும் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரான் நாட்டிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே மோதல் இருந்து வந்தால் அதனை வேறு வழிகளில் தீர்த்திருக்க வேண்டும். அதைவிடுத்து ஈரான் நாட்டவர்கள் தங்களது ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்காதது மன்னிக்க முடியாத குற்றம்" என தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா அரசு பல குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது. தீவிரவாதத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் சவுதி அரசு ஈராக், சிரியா,யமன் போன்ற நாடுகளில் சக இஸ்லாமியர்களின் இரத்தங்களை ஓட்டக்கூடிய காரியங்களில் ஈடுபட்டுவருவதாக ஹசன் ரோஹானி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈரான் மற்றும் சவுதி அரசுக்கிடையே பல்வேறு ஆண்டுகளாக மோதல் போக்குகள் இருந்து வருகிறது. கடந்த 30 வருடங்களில் இல்லாத வகையில் இம்முறை முதன் முறையாக ஈரான் நாட்டவர்களுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சவுதி வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் ஏற்பட்ட நெரிசலில் 2000ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானவர்கள் ஈரான் நாட்டைச்சேர்ந்தவர்களே. கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு காரணமே ஈரான் நாட்டினர் தான் என்றும் அவர்கள் விதிமுறைகளை மீறி சென்றதால் தான் நெரிசல் ஏற்பட்டது என்றும் சவுதி அரேபியா அரசு ஈரானை குற்றஞ்சாட்டியது.
ஆனால் இதனை முற்றிலுமாக ஈரான் மறுத்துள்ளதோடு அந்நாட்டு மத தலைவர் ஆயத்துல்லா கோமேனி சவுதி அரசு தான் அவ்விபத்துக்கு காரணம் என குற்றஞ்சாட்டினார்.
சவுதி அரேபியாவின் மூத்த மதத்தலைவர் அப்து அஜீஸ் அல் சேக் என்பவர் ஈரான் நாட்டினர்கள் முஸ்லிம்கள் அல்ல என பத்வா (மத தீர்ப்பு) வழங்கியிருப்பதை ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜவாத் ஜரீப் கடுமையாக கண்டித்துள்ளார்.

No comments:
Write comments