கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமையகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 200 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக கர்நாடகத்தில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்படுகின்றன. இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கர்நாடகத்துக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தியும், தவாகவினர் என்எல்சி தலைமையகத்தை முற்றுகையிட முயன்றனர்.
முன்னதாக, நெய்வேலி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் உ.கண்ணன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் என்எல்சி நிறுவனத்துக்கு ஊர்வலமாகப் புறப்பட்டனர்.
அப்போது, சிலர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது போலீஸார் தடுத்தனர். பின்பு, சிறிது தொலைவு சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திகைது செய்தனர்.
அப்போது, உ.கண்ணன் கூறியதாவது, தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வழங்குவதை நிறுத்த வேண்டும். கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு மத்திய அரசும், கர்நாடக அரசும் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
போராட்டத்தையொட்டி நெய்வேலி மத்தியப் பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ள கன்னட சபாவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

No comments:
Write comments