தமிழக காங்கிரஸ் தலைவராக இன்று பதவி ஏற்கவிருக்கும் சு.திருநாவுக்கரசர் காவிரி பிரச்னைகளுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். ‘காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்திருந்தால் காவிரி பிரச்னையில் இந்த அளவுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்காது’ என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவராக சு. திருநாவுக்கரசரை நியமித்து கட்சி மேலிடம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. சென்னையில் இருந்த அவரை பல்வேறு மூத்த தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். திமுக பொருளாளரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போன்றோரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். நேற்று காலை 10.45 மணிக்கு அவர் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். செல்வதற்கு முன்பு நேற்று விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழக காங்கிரஸ் தலைவராக என்னை நியமனம் செய்த சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கிறேன். இரவே சென்னை திரும்பி விடுவேன். நாளை முன்னாள் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெறுவேன். நாளை மாலை நான்கு மணியளவில் தலைவராக பொறுப்பேற்று எனது பணியை தொடங்க உள்ளேன். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்திருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு ஆகியிருக்காது. மத்திய அரசு காலம் தாழ்த்தியதுதான் இதற்கு காரணம். காவிரி பிரச்னை தமிழர்களின் வாழவாதாரப் பிரச்னை. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறந்து விட வேண்டும். கர்நாடகாவில் நடக்கும் கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்களை மத்திய அரசும் தலையிட்டு நிறுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் நாளை நடக்கும் முழு கடை அடைப்புக்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருப்பதால் டெல்லியில் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேசும்போது தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக மாநில அரசுக்கு அறிவுறுத்துங்கள் என்று முறையிடுவேன். இரு மாநில சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். வன்முறை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு, நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் கன்னட மக்கள் குறைந்த அளவில்தான் வசிக்கிறார்கள். ஆனால், கர்நாடகாவில் தமிழ் மக்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். அந்த தமிழ் மக்களைப் பாதிக்கும் வகையில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது. கர்நாடகாவில் காங்கிரஸுக்கு முன்பாக பாஜக ஆட்சியில் இருந்தது. அப்போதும் இதே போல் கலவரம் நடந்து, தமிழர்கள் தாக்கப் பட்டார்கள். அதையெல்லாம் மறைத்து விட்டு தற்போது காங்கிரஸ் ஆட்சியில் மட்டும் கர்நாடகாவில் கலவரம் நடப்பது போலவும், தமிழர்கள் தாக்கப்படுவது போலவும் காங்கிரஸ் கட்சியை காயப்படுத்திப் பேசுவது சரியானதல்ல. இப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் இணைந்து இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயமாக போட்டியிடும். மேலிட தலைவர்களை கலந்து பேசிவிட்டு கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Write comments