கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி சார்பில் கோட்டயம் மாவட்டத்தில் வீதிகளில் அச்சுறுத்திக்கொண்டிருந்த 5 நாய்களை கொன்று அவற்றை கம்பத்தில் கட்டி ஊர்வலமாக எடுத்துச்சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணியாக சென்ற அவர்கள் கோட்டையம் தபால் நிலையம் சென்றது கொல்லப்பட்ட நாய்களை புதைத்துவிட்டு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சாஜி மஞ்சகடம்பில் செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது, தெருவீதிகளில் மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்து வந்த இந்த நாய்களை கொன்றுவிட்டோம். தெரு நாய்களின் தொல்லைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறினால் இது போன்ற போராட்டங்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும்" என எச்சரித்தார்.
கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்ததாவது, "தெரு நாய்கள் சட்டவிரோதமாக கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது" என தெரிவித்திருந்தார். எனினும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
கேரள மாநிலத்தில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிக அளவில் இருப்பதாக குற்றச்சாட்டு ஏற்கனவே இருந்து வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாயினால் கடிக்கப்பட்ட தமிழகத்தைச்சேர்ந்த ஒரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றது. அதே சமயம் விலங்குகளை இவ்வாறு கொல்வதற்கு தடைவிதிக்க கோரி மத்திய அமைச்சர் மேனகா காந்தி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments