சிரியாவில் பள்ளிக்கூடம் மீது நிகழ்த்தப்பட்ட வான்வழித்தாக்குதலில் 22 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷியாவின் படைகள் இணைந்து ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இந்நிலையில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தில், சிரியா மற்றும் ரஷ்ய படைகள் நேற்று வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 22 குழந்தைகள், 6 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யுனிசெப்பின் இயக்குநர் அந்தோனி லேக், இது ஒரு போர்க்குற்றம் என்றும், மிகக் கொடூரமான செயல்பாடு என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இட்லிப் நகரில் தாக்குதல் தொடங்கியதை அறிந்த பள்ளி நிர்வாகம், வகுப்புகளை முடித்துக் கொண்டு மாணவர்களை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போது, நுழைவு வாயிலில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர் என்று உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது. சிரியாவில் கடந்த மார்ச் 2011ஆம் ஆண்டு முதல், 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Write comments