கர்நாடகாவுக்கு நேற்று, 22 வது நாளாக வாகன போக்குவரத்து முடங்கிய நிலையில், நேற்று முன்தினம், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு, துக்க நிகழ்வுக்கு வந்தவர்களின் காரை, போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
காவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடகாவில் அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. ஓசூர் வழியாக கர்நாடகாவிற்கு செல்லும் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள், மாநில எல்லையான ஜூஜூவாடியுடன் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. நேற்று, 22 வது நாளாக தமிழக வாகனங்கள் கர்நாடகாவிற்குள் அனுமதிக்கப்படவில்லை. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு, அம்மாநில பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட போதும், ஜூஜூவாடியில் தடுத்து நிறுத்தி, மீண்டும் கர்நாடகாவுக்கே தமிழக போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களின் கண்ணாடிகளை, நேற்று முன்தினம் இரவு, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி போலீஸ் ஸ்டேசன் எஸ்.ஐ., சீனிவாஸ் என்பவர் அடித்து நொறுக்கினார். அதனால் நேற்றும் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. 'கர்நாடக வாகனங்களை தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம்' என, உயர் அதிகாரிகள் கூறியுள்ளதால், அனைத்து வாகனங்களையும் போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். நேற்று முன்தினம் காலை, கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு, துக்க நிகழ்வுக்கு வந்தவர்களின் காரை, தமிழக போலீசார் ஜூஜூவாடியில் தடுத்து நிறுத்தினர். காரில் இருந்து இறங்கிய வாலிபர், அழுதபடியே, துக்க நிகழ்வுக்கு செல்வதாக போலீசாரிடம் கூறினார். ஆனால், போலீசார் அதை பொருட்படுத்தாமல், காரை மீண்டும் கர்நாடகாவுக்கே திருப்பி அனுப்பினர். இது எல்லையில் பஸ் ஏற காத்திருந்த பயணிகளை கண் கலங்க வைத்தது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments