மேலே நீங்கள் பார்த்த போட்டோ பங்களாதேஷ் கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரது வீட்டு அலமாரியையும் அலங்கரிக்கப் போகின்ற படம். கிரிக்கெட்டைக் கண்டுபிடித்த இங்கிலாந்து நாட்டின் சிறந்த அணி, பங்களாதேஷ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றபோது, அது ஒரு வழக்கமான சம்பவமாக இருந்தது. சமீப ஆண்டுகளாக இங்கிலாந்து, பங்களாதேஷ் சென்று விளையாடி வருகிறது. அனைத்திலும் வெற்றியும் பெற்றிருக்கிறது. ஆனால், இந்த முறை இரண்டாவது போட்டி அப்படி நடைபெறவில்லை.

முதலில் பேட் செய்த பங்களாதேஷ் 220 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் சீனியர் வீரரான தமீம் இக்பால் சதம் அடித்து தனது அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்டித்தந்தார். முதல் போட்டியின் வெற்றியினால் கொஞ்சம் அசட்டையாகத் தான் மைதானத்துக்கு வந்தனர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். ஆனால், பங்களாதேஷின் 220 ரன்களைக் கடப்பதற்கே படாத பாடுபட்டு 244 ரன்களை எடுத்தனர். பங்களாதேஷின் சுழற்பந்து வீச்சாளர் மெஹெதி ஹசன் இங்கிலாந்து அணியின் முக்கிய எலும்பாக ஒவ்வொரு பேட்ஸ்மேன் மாறியபோது விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து பேட்டிங் செய்ய வந்த பங்களாதேஷ் பேட்ஸ்மேன்களை முழு கவனத்துடன் இங்கிலாந்து அணி கையாண்டும் 296 ரன்களைக் குவித்து கிரிக்கெட்டில் தங்களது வளர்ச்சியைக் காட்டினார்கள். தமீம் இக்பாலை வீழ்த்திவிட்டாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தனர். அடுத்து களம் கண்டது இங்கிலாந்து அணி. இரண்டாவது இன்னிங்ஸை எப்போதும் விரைவாக முடிக்க நினைக்கும் இங்கிலாந்து அவசரத்துடன் விளையாடாமல் நிதானமாகத் தான் விளையாடியது. ஆனாலும், மீண்டும் அவர்களது அரணுக்குள் நுழைந்தார் மெஹெதி ஹசன். முதல் விக்கெட் 100ஆவது ரன்னில் வீழ்ந்தது. அடுத்த விக்கெட் 105, அதன்பின் 124 ரன்னில் கேரி பல்லன்ஸ், மோயின் அலி என இரண்டு விக்கெட். 127இல் அலஸ்டைர் குக். 139இல் ஜானி பைர்ஸ்டோ என தொடர்ந்து வீழ்த்தப்பட வெளவளத்துப்போனது இங்கிலாந்து.

அதன்பின் சில ரன்களுக்குத் தாக்குப்பிடித்தது இங்கிலாந்து. மீண்டும் 161 ரன்னில் ஷாகிப் அல் ஹசன் பென் ஸ்டோக்ஸை வீழ்த்தித் தொடங்கி வைத்த விக்கெட் திருவிழாவை 45ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் பத்தாவது விக்கெட்டாக ஸ்டீவன் ஃபின் விக்கெட்டை மெஹெதி ஹசன் வீழ்த்தி முடித்து வைத்தார். 108 ரன் வித்தியாசத்தில் பங்களாதேஷ், இங்கிலாந்தை வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் சமன் செய்யப்பட்டிருக்கிறது அவ்வளவு தான். ஆனால், 16 வருட டெஸ்ட் வரலாற்றில் பங்களாதேஷ் இங்கிலாந்து அணியை முதன்முறையாக வென்றிருக்கிறது. 1986 முதல் ஒருநாள் போட்டிகள் விளையாடி வந்தாலும், பங்களாதேஷுக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடும் தகுதி கிடைத்தது 2000ஆவது வருடம்தான். இதுவரை மொத்தமாக 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் பங்களாதேஷ் அணி 72 போட்டிகளில் தோற்று, 8 போட்டிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த 8 வெற்றிகளில் ஜிம்பாபேவை 5 முறையும், வெஸ்ட் இண்டீஸை 2 முறையும், இப்போது இங்கிலாந்தைத் தோற்கடித்ததும் இடம்பெறும். மேலும் இந்தப் போட்டியில் மெஹெடி ஹசன் எடுத்த 12 விக்கெட்டுகள்தான் பங்களாதேஷ் அணியில் சாதனையாக இருக்கிறது. பல நாட்கள் கடின உழைப்புக்குப் பிறகும் போட்டிகள் முடிந்ததும் பரிசளிப்பு விழாவில் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து வந்த அணியின் கேப்டனுக்கு எதிர் அணியின் கேப்டனுடன் சமமாக நின்று ஒரு கோப்பையைப் பகிர்ந்து கொள்வதில்தான் எத்தனை ஆனந்தம் இருந்திருக்க வேண்டும். மேலே இருக்கும் படத்தில் முஷ்ஃபிகில் ரஹிமின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பாருங்கள். அப்படியே உலகக்கோப்பையை வென்றது போல் இரண்டாவது டெஸ்ட் முடிந்ததும் ஓடி விளையாடிய பங்களாதேஷ் அணியினரின் கொண்டாட்டத்தை யூடியூபில் பாருங்கள்.

No comments:
Write comments