புனே வங்கியில் நடு வயதைக் கடந்துவிட்ட பெண் ஊழியர் ஒருவர் மெதுவாக பணத்தை எண்ணுவதாகவும், வங்கிக்கணக்கு புத்தகத்தில் அதை மெதுவாகப் பதிவதையும் அவருக்கே தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்த ஒருவர், அதை இணையத்தில் பரவ விட்டார். அக்டோபர் 24ஆம் தேதி பரவ விடப்பட்ட இந்த வீடியோ இந்தியா முழுக்க வைரலானது. ‘உலகத்திலேயே மிகவும் வேகமான காசாளர்’ என்னும் ஹேஸ்டேக்குடன் அந்த வீடியோ பதிவிடப்பட்டது. அதை 11 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். சுமார் 30,000 பேர் தரக்குறைவான விமர்சனங்களை அவருக்கு எதிராக பதிவு செய்துள்ளனர். இது அந்த பெண்ணின் மீது பரவலாக ஆத்திரத்தை ஏற்படுத்திய அதே நேரம், பெரும்பாலானவர்கள் அந்த பெண்ணின் வயது, பணிச்சூழலை கருத்தில் கொண்டு ஆதரித்திருந்தனர்.
தமிழ் சூழலைப் பொருத்தவரை இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த எழுத்தாளர் ஜெயமோகன், “அவர் ஒரு தேவாங்கு. நியாயப்படி இந்தக்கிழவியை அப்படியே கழுத்தை பிடித்து வெளியே தள்ளி மீதி காசைக் கொடுத்து அனுப்ப வேண்டும். வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்யும்போல. அதை விட மோசமாக செய்யுது. இது திறமையின்மை மட்டும் அல்ல. நீண்ட காலமாக மூளையை எதற்குமே பயன்படுத்தாமல் வைத்திருக்கும்போது ஏற்படும் சோம்பல். அதைவிட முக்கியமாக எதிரே நிற்பவர்களைப் பற்றிய பரிபூர்ணமான அலட்சியம்” என்று பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவால் அதிர்ச்சியடைந்த பலர் ஜெயமோகனை கண்டிக்க அந்த பதிவை பின்னர் நீக்கி விட்டார். இந்நிலையில், வங்கி காசாளர் மெதுவாக வேலை செய்வதற்கான உண்மையான காரணத்தை மனித உரிமை ஆர்வலர் குந்தன் ஸ்ரீவஸ்தா வெளியிட்டுள்ளார். அதில், “பிரேமலதா ஷிண்டே என்பவர் புனே வங்கி ஒன்றில் காசாளராக பணியாற்றி வருகிறார். அவருடைய கணவர் இறந்து விட்டார். அவருடைய ஒரே மகன் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நீண்ட மருத்துவ விடுப்புக்குப் பிறகு, இப்போது மீண்டும் பணிக்கு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இருமுறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற இருக்கிறார். அவருக்குச் சம்பளத்தோடு கூடிய விடுப்பு இருந்தும்கூட பணிக்கு வருகிறார். உண்மையிலேயே பிரேமலதா தன்னுடைய வேலையில் ஈடுபாட்டுடன் இருப்பார். அதனால்தான் விடுப்பு இருந்தும் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வந்திருக்கிறார். மேலும், அவர் நேர்மையாக வேலை செய்து ஓய்வு பெற வேண்டும் என்பதால்தான் உடல்நிலை முடியாதபோதும் பணிக்கு வந்துள்ளார். பிரேமலதா அதிகாரிகளிடம் மீண்டும் பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என வற்புறுத்தி கேட்டு பணியில் சேர்ந்தார். அதனால், வங்கி ஊழியர்கள் அவர் கஷ்டப்படாமல் இருப்பதற்காக கூடுதல் கவுண்டர் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இந்நிலையில், யாரோ ஒருவர் இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஒருவரின் முழு விவரம் தெரியாமல் எந்தவித தகவலையும் வெளியிடக்கூடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மேலும், ஒருவரின் அனுமதி இல்லாமலும் அவருக்கு தெரியாமலும் அவரை வீடியோ எடுப்பது கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.
- வினிதா

No comments:
Write comments