நாளை 25ஆம் தேதி திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கும் நிலையில், இக்கூட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்ட வைகோ, திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தை மிக கடுமையாக விமர்சித்தார். மூன்று தொகுதிகளிலும் தேர்தல் புறக்கணிப்பை அறிவிக்க நடத்திய ஊடகச் சந்திப்பில் அதுபற்றி ஒரே ஒரு வரியில் கடந்து சென்ற வைகோ, மொத்த பிரஸ் மீட்டிலும் திமுக-வையும் அவர்கள் அழைப்பு விடுத்த அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கடுமையாக விமர்சித்தார். திமுக அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி பங்கேற்காது என்றும் அறிவித்தார். இது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது கட்சியின் பிரமுகர்கள் வைகோ-வின் இந்த அறிவிப்பு தொடர்பாக அவரை தொடர்புகொண்டு “நம்மிடம் ஆலோசிக்கலாமலேயே எப்படி புறக்கணிப்பு என்று அறிவிக்கலாம்” என்று கேட்க, கட்சி நிர்வாகிகளிடம் “காவிரி பிரச்னை, பொது பிரச்னை என்பதால் அனைத்துக்கட்சி கூட்டத்தை யார் கூட்டினாலும் பங்கேற்கலாம் என்கிற கருத்தை மக்கள் நலக் கூட்டணியில் முன் வைத்தேன்” என்று வருத்தப்பட்டிருக்கிறார். வைகோவின் இந்த அறிவிப்பு சிறுத்தைகள் கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், இன்று காலை கே.கே.நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் தன் மாநில நிர்வாகிகளுடன் 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் திருமா. அதன் பின்னர் முடிவுகளை அறிவிப்பார். மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் திருமா, திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வாரோ, இல்லையோ… அது அவரது கட்சியின் முடிவு. ஆனால், மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளாது என்று வைகோ அறிவித்ததில் திருமா வருத்தத்தில் இருக்கிறார். காரணம், மக்கள் நலக் கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. பொதுப்பிரச்சனைகளில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் ஒத்த கருத்து கிடையாது. உதாரணத்துக்கு ஈழப் பிரச்னையில் சி.பி.ஐ.எம். கட்சியின் நிலைப்பாடும் திருமாவின் நிலைப்பாடும் ஒன்று அல்ல என்னும்போது ஒரு பொது பிரச்னையின் முடிவை வைகோ அப்படி அறிவித்ததில் சிறுத்தைகள் கட்சியினர் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக கட்சி நிர்வாகி ஒருவர் பேசும்போது “கலந்து கொள்வதும் கொள்ளாததும் கட்சியின் முடிவு. நாங்கள் யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. வைகோ எங்களைக் கேட்காமல் அறிவித்தது தவறு” என்றார்.

No comments:
Write comments