தமிழகம் முழுவதும் 1.35 லட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றோடு முடிவடைகிறது. இதை தொடர்ந்து அந்த பதவியிடங்களை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதற்கான அரசாணை இன்று வெளிடப்பட உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 1,31,794 உள்ளாட்சி பதவியிடங்கள் உள்ளன. அதில் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கான 655 வார்டு உறுப்பினர்கள், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கான 6,147 வார்டு உறுப்பினர்கள், 12,524 கிராம ஊராட்சி தலைவர்கள், 99,324 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 1,18,974 பதவியிடங்கள் உள்ளன. நகர்புற உள்ளாட்சிகளைப் பொருத்தவரை 12 மாநகராட்சிகளில் 919 கவுன்சிலர்கள் மற்றும் 124 நகராட்சிகளில் 3,613 வார்டு உறுப்பினர்கள், மேலும் 528 பேரூராட்சிகளில் 8,288 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவியிடங்கள் உள்ளன.
2011ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட, உள்ளாட்சி பிரதிகளின் பதவிக்காலம் இன்றோடு முடிவடைகிறது. நாளை (25ஆம் தேதி) முதல் உள்ளாட்சி பதவியிடங்கள் அனைத்தையும் தனி அதிகாரிகளை நியமித்து நிர்வகிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறவில்லை என்பதால், தனி அதிகாரிகளை நியமிக்கும் அவசரச் சட்டத்தை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்தார். அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அந்தந்த ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் ஆகியோர் தனி அதிகாரிகளாக நியமிக்கப்பட உள்ளனர். ஆனால், ஊரக உள்ளாட்சி பதவியிடங்கள், லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதால் அதனை நிர்வகிக்க கூடுதலான அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான முடிவுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்களே எடுப்பார்கள் என்று தெரிகிறது. ஒரு அதிகாரிக்கு ஐந்து உள்ளாட்சி பதவியிடங்கள் வரை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்படும் என்று மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூறுகின்றனர். தனி அதிகாரிகளுக்கு வாகனம், எரிபொருள் ஆகிய செலவுகளுக்குச் சலுகைகள் அளிக்கப்படும். மேலும் அரசாணை மூலம் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் முடிந்து முதல் கவுன்சில் கூட்டம் கூடும் வரையிலோ அல்லது டிசம்பர் 31ஆம் தேதி வரையிலோ தனி அதிகாரிகளே பொறுப்பில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

No comments:
Write comments