இந்தியாவில் சீன பட்டாசுகளின் விற்பனை சென்ற ஆண்டைவிட இருட்டிப்பாக அதிகரித்து, இந்த வருடம் பட்டாசு விற்பனையில் சீன பட்டாசுகளின் பங்கு 40 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சீன பட்டாசுகளின் விற்பனை அதிகரித்ததை அடுத்து உள்ளூர் பட்டாசுகளின் விற்பனை 25 சதவிகிதம் வரை சரிந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் கூறுகையில், ‘இந்தியாவில் அதிகளவில் சீன பட்டாசுகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதினால் உள்ளூர் பட்டாசுகளின் விற்பனை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டாசு உற்பத்தியில் சிவகாசி 90 சதவிகிதம் பங்களிக்கிறது. சிவகாசியில் உள்ள அனைத்து பட்டாசு விற்பனையாளர்கள் பிரதிநிதியாக தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது.
சட்டவிரோதமாக சீன பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டதை அடுத்து சீன பட்டாசுகளின் விற்பனை இந்த வருடம் அதிகரித்துள்ளது. இதனால் சிவகாசியில் இருந்து விற்பனை செய்யப்படும் பட்டாசுகளின் தொகை ரூ.3,000 கோடியாக குறைந்துள்ளது. சென்ற ஆண்டு சிவகாசி பட்டாசுகள் ரூ.4,000 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது.
இந்திய பட்டாசுகளின் விலையை விட 20 முதல் 40 சதவிகிதம் வரை குறைவாக சீன பட்டாசுகள் கிடைப்பதும் சீன பட்டாசுகளின் விற்பனை அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. சட்டவிரோதமாக இந்தியாவுக்கு சீன பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுவதினால் இந்திய பட்டாசு வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சீன பட்டாசுகளின் விற்பனை அதிகரிப்பினால் சிவகாசியில் உள்ள 5 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய பட்டாசு விற்பனையாளர்கள் நலனை காக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

No comments:
Write comments