ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக வதந்தி பரப்பியதாக எட்டு பேர் இதுவரை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 52 பேர் மீது வழக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், நேற்று டிராபிக் ராமசாமி மீதும் அவரது உதவியாளர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது சைபர் கிரைம் காவல்துறை. வதந்தி என்னும் பெயரில் திமுக-வினர் பழி வாங்கப்படுவதாக திமுக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவருமான ஹெச்.எல்.தத்து, இந்த கைதுகளுக்காக தமிழக அரசை வன்மையாக கண்டித்திருந்தார். ‘இப்போது வதந்தி என்னும் பெயரில் கைது செய்வது தவறு’ என்றும் கூறியிருக்கிறார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் நிறுவன நாள் விழாவில் கலந்து கொண்ட பின்னர் பேசிய தத்து, “அனைவருமே அதிகாரம் வேண்டும் என விரும்புகிறோம். தேசிய மனித உரிமைகள் ஆணையமும் கூடுதல் அதிகாரம் வேண்டும் என விரும்புகிறது. அப்படி அதிகாரம் கிடைத்தால்தான் புலி போல நாங்கள் உறும முடியும். அரசியல், ஜாதி உள்ளிட்ட எவை பற்றியும் கவலைப்படாமல் எங்களிடம் வரும் புகார்களை நாங்கள் விசாரிக்கிறோம். பொதுவாக 95-96 சதவிகித வழக்குகளில் அரசுகளும் அதிகாரிகளும் எங்களது நோட்டீஸுகளுக்குப் பதில் தருகின்றனர். கடந்த அக்டோபர் 2015 முதல் 2016 செப்டம்பர் வரை மொத்தம் 1,04,664 புகார்களை தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிவு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக 32,498 புகார்கள் போலீஸாருக்கு எதிரானதாகும். என்கவுண்ட்டர் தொடர்பானவை 206 புகார்களாகும்” என்றவரிடம், தமிழகத்தில் நடைபெறும் வதந்தி கைதுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிகளித்த தத்து, “வதந்தி பரப்புகிறார்கள் என்னும் பெயரில் கைது செய்வது தவறானது, தேவையற்றது. இந்த கைதுகள் மூலம் வதந்திகளுக்குத் தீர்வு காண முடியாது. மக்களுக்குக் கருத்துகளைத் தெரிவிக்க சுதந்திரம் இருக்கிறது” என்றார். ஹெச்.எல்.தத்து. இப்போது தேசிய மனித உரிமை ஆணையராக இருக்கும் தத்து உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அவரிடம்தான் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு தொடர்பான ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. சிறையில் இருந்தவர்களுக்கு ஜாமீன் வழங்கியவரும் அவர்தான்.

No comments:
Write comments