தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் வருகிற நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.
அரவக்குறிச்சி (கே.சி.பழனிசாமி)
அரவக்குறிச்சி வேட்பாளராக கே.சி.பழனிசாமியை திமுக தலைமை அறிவித்துள்ளது. தொழிலதிபராகிய இவர், கரூர் மாவட்ட முன்னோடிகளில் ஒருவர். பெற்றோர் சின்னப்பனார் - வெங்கிட்டம்மாள். 24-4-1935இல் பிறந்த இவர், எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருக்கிறார். ஏற்கனவே கரூர் எம்.பி-யாகப் பணியாற்றியுள்ள இவர், கடந்த முறை அரவக்குறிச்சி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றவர். இவரது மனைவி அன்னம்மாள். இவருக்கு சிவராமன் என்ற மகனும், கலையரசி என்ற மகளும் உள்ளனர்.
தஞ்சை (டாக்டர் அஞ்சுகம் பூபதி)
தஞ்சை தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பவர் அஞ்சுகம் பூபதி (29). இவரது தந்தை பூபதி, தஞ்சை நகர திமுக பொறுப்பாளராகவும், நகராட்சித் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். தாயார் ரூபாவதி. மருத்துவரான அஞ்சுகம் பூபதி, தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றியவர். இவர், கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலுக்காக அரசாங்கப் பணியை ராஜினாமா செய்தார். தற்போது தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளராக இருக்கிறார். ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தற்போது தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள குறிஞ்சி நகரில் வசித்து வருகிறார். 7-4-1987இல் பிறந்த இவருக்கு திமுக தலைவர் கருணாநிதி, தனது தாயாரின் பெயரைச் சூட்டினார்.
திருப்பரங்குன்றம் (டாக்டர் சரவணன்)
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட சீட் பெறுவதில் திமுக-வினரிடையே கடும் போட்டி நிலவியது. அந்தப் போட்டிகளுக்கிடையே மதிமுக-வில் இருந்து திமுக-வுக்கு வந்த டாக்டர் சரவணனை வேட்பாளராக திமுக தலைமை அறிவித்திருக்கிறது. 11-5-1969இல் பிறந்த இவர், மாநில மருத்துவரணி துணைத் தலைவராக இருக்கிறார். பெற்றோர் பாண்டியன் - அங்கம்மாள். மனைவி கனிமொழி. இவருக்கு அம்ப்ரீத் குமார் (21) என்கிற மகனும், நேஷ்மா (15) என்கிற மகளும் உள்ளனர். இவர் மதுரையில் உள்ள சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். மதிமுக புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த இவர், வைகோ-வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி திமுக-வில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments