தமிழக முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 25 நாட்களுக்கு மேலாகி விட்டது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி முதல் அரசியல்கட்சி தலைவர்கள் பலரும் முதல்வரைக் காண அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சென்று விட்டார்கள். ஆனால், எப்போதும் தமிழக முதல்வரோடு நட்பு பாராட்டும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வரை வரவில்லை. இன்று வருவார், நாளை வருவார் என்று அவ்வப்போது செய்திகள் மட்டும் கசிவதோடு சரி. இந்நிலையில், ‘முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க பிரதமர் மோடி விரைவில் சென்னை வருவார்’ என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது, “இந்த ஆண்டு தமிழகத்தில் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும். தமிழக முதலமைச்சர் குறித்து கேட்டறிய பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். முதலமைச்சரைக் காண உரிய நேரத்தில் மோடி சென்னை வருவார்” என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பாஜக-வின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments