இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மீது நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்ஸ் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்ட டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கண்டனம் தெரவித்துள்ளார்.கடந்த மாதம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதற்கு பதிலடி கொடுக்க வேண்டி பல தரப்பிலிருந்தும் வந்த அழுத்தத்தைத் தொடர்ந்து ,கடந்த 29-ஆம் தேதி இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில்50 பேர் பலியானதாக தகவல்கள் வந்தன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கையை வெகுவாக பாராட்டினர். இதில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை இந்திய ராணுவத்தினர் அப்புறப்படுத்தி விட்டதாக கூறியதால் , பலியானவர்களின் துல்லியமான எண்ணிக்கை தெரியாமல் போனது.
ஆனால் பாகிஸ்தான் அரசோ தங்கள் எல்லைக்குள் யாரும் வரவில்லை என்றும் அப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என்றும் வாதிட்டு வருகிறது. இந்த குழப்பமான சூழ்நிலையால் இரு நாட்டு எல்லையும் பதற்றம் அதிகரித்து வரவே இந்திய எல்லையையொட்டி பாகிஸ்தான் வீரர்கள் குவிக்கப் பட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் , டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் , பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் , தாக்குதல் நடத்திய வீடியோ ஆதாரங்களை வெளியிட வேண்டும் எனக் கூறினார். இதற்கு , ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லையா என்று கேள்வி எழுப்பி பாஜக.வினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகளும் , ஐ,நா.பார்வையாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கைகளும் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகின்றன என்று கெஜ்ரிவால் கூறினார். இந்த கருத்துக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் தொடர்ச்சியாக கைதானதில், கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக கூறியிருந்தார். நேற்று தனது வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் ட்ரைலரை வெளியிட்டு பேசிய அவர் கூறியதாவது, “ ராணுவ நடவடிக்கை பற்றி கேள்வி எழுப்புவதும் , ஆதாரம் கேட்பதும் வன்மையாக கண்டிக்கத் தக்கது.இது எல்லைப் பிரச்சனை.இதில் நாம் ராணுவத்தை முழுமையாக நம்ப வேண்டும்” என்று கூறினார். சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே 1962-ல் நடந்த சீனப் போரின் போதும், 1965-ல் நடந்த பாகிஸ்தான் போரின் போதும் இந்திய ராணுவத்தின் சார்பாக பங்கேற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:
Write comments