முதல்வர் ஜெயலலிதாவின் உடல் தொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறப்பட்ட நிலையில் தற்போது நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதல்வரின் உடல்நிலை குறித்து இதுவரை 5ற்கும் மேற்பட்ட அறிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதனிடையே முதல்வரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது. அரசாங்கத்தின் சார்பில் இதுவரை எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
இந்தப் பிரச்னையை கையில் எடுத்த, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வு பாதிப்பு உள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தொடக்கத்தில் அறிவித்தது.
2 நாட்களுக்கு பிறகு, டாக்டர்கள் அளித்த பேட்டியில், முதல்வர் நலமாக உள்ளார், 2 நாட்களில் வீடு திரும்பி விடுவார், அவருக்கு ஓய்வு தேவை' என்றனர். ஆனால் திடீரென்று லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் ஜான் வந்து அப்போலோ மருத்துவமனையில் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். முதல்வருக்கு என்ன நோய் பாதிப்பு என்பதை இதுவரை மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை.
இந்த நிலையில், முதல்வருடைய உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள மக்களும், அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். அதிமுகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், மருத்துவமனை முன்பு பூஜைகள் நடத்த போலீசார் அனுமதிக்கின்றனர். மருத்துவமனைக்கு பொதுமக்கள் சென்றாலும் தடுக்கிறார்கள். முதல்வரின் உடல்நிலை குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப், வார பத்திரிகைகளில் பல புரளிகள் கிளப்பப்பட்டு வருகிறது. பல இடங்களில் திடீர் திடீரென கடைகள் மூடப்படுகின்றன என குறிப்பிட்டிருந்தார்.
தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிட வேண்டும். முதல்வரின் உடல்நிலை சரியாகும் வரை தற்காலிக முதல்வரை தமிழக ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 4ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில், டிராபிக் ராமசாமி தன் மனுவை விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். அதைக்கேட்ட நீதிபதிகள், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பவர், அந்த மாநில மக்களின் பிரதிநிதி. அதனால் அவரது உடல்நிலை குறித்து, பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் கடமையும் பொறுப்பும் அரசாங்கத்துக்கு உள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர்கள், இதுகுறித்து பதில் அளிக்க தங்களுக்கு போதிய அவகசாம் வேண்டும் என்று கேட்டனர். அதை ஏற்றுக் கொண்டு முதல்வரின் உடல் நிலை பற்றிய தகவலைப் பெற்று அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கை நீதிபதிகள் வழக்கை 6ஆம் தேதியான் இன்று ஒத்திவைத்தனர்.
இன்று இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமைநீதிபதி அடங்கிய அமர்வு, மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என்று கூறி தள்ளுபடி செய்தார். முதல்வரின் உடல்நிலை குறித்து தினசரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடும் அறிக்கையை மனுதாரர் பார்ப்பதில்லையா என்று கேட்ட நீதிபதி, விளம்பரம் தேடுவதற்காக இதுபோன்ற மனுவை தாக்கல் செய்யக்கூடாது என்றனர். நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றக்கூடாது என்றும் டிராபிக் ராமசாமிக்கு தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
No comments:
Write comments