முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 22 ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரின் உடல்நிலை குறித்து தவறான வதந்திகளை சிலர் சமூகவலைத்தளங்களில் பரப்பி வந்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தவறாக வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் பல முறை எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகள் நின்றபாடில்லை.
இந்நிலையில் முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதில் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வரும் நாமக்கல்லைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் மதுரையை சேர்ந்த மாடசாமி ஆகியோரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதனால் இது போன்ற தவறான தகவல்களையும், வதந்திகளையும், சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும், அதனை பிறருக்கு அனுப்புவதும் சட்டப்படி குற்றமாகும் எனவும் மேலும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் சுமார் 7 ஆண்டுகள் வரை நீதிமன்றத்தால் தண்டிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Write comments