மொத்த இந்தியாவும் முடங்கிக் கிடக்கும் நிலையில் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி அங்கு இரு அவைகளும் முடங்கியுள்ளன. அது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, தமிழகச் சட்டமன்றத்தில் கூட்ட வேண்டிய குளிர்கால கூட்டத்தொடர் எப்போது கூடும் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. பிரதான எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் காவிரி விவகாரம் மேலெழுந்து வந்தபோதும், ரூபாய் நோட்டு விவகாரம் வெடித்த போதிலும் தமிழகச் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தன. இதுதொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஸ்டாலின் நடத்திய உரையாடலின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் தலைமைச் செயலக அதிகாரிகளிடம் கொடுத்தார் ஸ்டாலின். அதில் பிரதான கோரிக்கையாக இருந்தது சட்டமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்பதுதான்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் எந்தக் கோரிக்கையையும் ஆளும் அதிமுக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதோடு குளிர்கால கூட்டத்தொடரும் நடக்குமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகச் சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் என்பது வழக்கமாக அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறும். ஆனால், நவம்பர் கடைசி வாரத்துக்கு வந்து விட்ட பின்பும் சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள், காவிரி பிரச்னை, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல விஷயங்களைப் பேச வேண்டிய நிலையில் எந்த சலனமும் இல்லாமல் இருக்கிறது தமிழக அரசு. தமிழக முதல்வர் மருத்துவமனையில் உள்ள நிலையில் இது தொடர்பாக எந்த ஒரு அமைச்சரும் பேசுவதில்லை.
ஆண்டுக்கு இரண்டு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்பது அவை விதி. கடந்த செப்டம்பரில் முடிவடைந்த முதல் கூட்டத்தொடருக்குப் பின்னர் இரண்டாவது கூட்டத்தொடரைக் கூட்ட பிப்ரவரி வரை நேரம் இருக்கிறது என்பதால் சிகிச்சையில் இருக்கும் ஜெயலலிதா வரட்டும் அல்லது அவரது உத்தரவின் பேரில் அவையைக் கூட்டிக் கொள்ளலாம் என்று அடக்கி வாசிக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள்.

No comments:
Write comments