பிரதமர் மோடி தான் ஒரு துறவி என கூறியதற்கு, ‘மோடி ஒரு செல்வந்தரே’ என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் நகரில் நேற்று பிற்பகல் நடைபெற்ற பரிவர்த்தனை பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், தான் கருப்புப் பணத்தை ஒழிக்க போராடுவதாகவும், தான் ஒரு துறவி எனவும் பேசினார். இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ‘மோடி ஒரு துறவி அல்ல; அவர் ஒரு செல்வந்தரே’ என்று கூறினார்
லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் இதுகுறித்து கூறியதாவது, “செல்வந்தர்களை காப்பவர் தன்னை எப்படி ஒரு துறவியென சொல்வார். அவர் துறவியெல்லாம் அல்ல. அவர் பெரும் செல்வந்தர்தான். நோட்டு நடவடிக்கையினால் நாட்டின் 90% சாமானிய மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இச்செயல் அவரின் எதேச்சதிகார போக்கையே காட்டுகிறது. மோடி அரசின் தவறான போக்குகளுக்கு பகுஜன் சமாஜ் கட்சி மக்களவைக்கு உள்ளேயும், வெளியேயும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும். ஊழலை ஒழிக்கதான் இந்த திட்டத்தை கொண்டு வந்ததாக பாஜக அரசு கூறுகிறது. பிறகு ஏன் பாஜக ஆட்சியேற்ற பின் லோக்பால் மசோதாவை நிறைவேற்றவில்லை?
இவர் குஜராத் முதல்வராக இருந்தபோது லோக்பால் ஆயுக்தாவை செயலிழக்க செய்தவர்தான். இவர்கள் ஊழலை ஒழிக்க போகிறோம் என்று கூறுவதெல்லாம் வெறும் கண் துடைப்புதான். கருப்பை, வெள்ளையாக மாற்ற வருமான வரிச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதுதான் மோடி சர்க்கார். உத்திரப்பிரதேசத்தில் வங்கிகளில் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள் மீது போலீஸ் தனது அதிகாரத்தை காட்டுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் உ.பி மக்கள் பாஜக-வை ஒன்றுமில்லாமல் செய்வார்கள். வரும் 2019இல் மோடி மீண்டும் குஜராத்துக்கே அனுப்பி வைக்கப்படுவார்”. இவ்வாறு மாயாவதி கூறினார்.

No comments:
Write comments