பிரதமர் மோடி, கடந்த நவம்பர் 8ஆம் தேதி இரவு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அந்த நிமிடத்தில் இருந்து, மொத்த இந்தியாவும் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களின் வாசலிலும் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கிறது.
ஆனால், பெரும் தொழில் அதிபர்களின் வீடுகளில், ரகசிய அறைகளில் கட்டுக்கட்டாக பல கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன. மத்திய அரசே, ’தொழில் அதிபர்களும் வங்கி அதிகாரிகளும் இணைந்து பணத்தை மாற்றி ஊழல் செய்துள்ளனர்’ என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக வங்கிகள் மூடப்பட்டுள்ளன. எந்த ஏடிஎம் மையங்களிலும் பணம் இல்லை. இதனால் பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால், எங்கும் பணம் கிடைக்காத காரணத்தால் அத்தியாவசிய பொருட்களைக் கூட, வாங்கமுடியாமல் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, ’டிஜிட்டல் மயமாகிவிட்டால் இந்திய பொருளாதாரம் வளர்ந்துவிடும்’ என்று தொடர்ந்து பாராளுமன்றம் தவிர மற்ற இடங்களிலும் கூட்டங்களிலும் பேசி வருகிறார். ஆனால், சென்னையில் வர்தா புயலின் பாதிப்பின் காரணமாக மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகையால், கடைகளில் ஸ்வைப் இயந்திரம் இருந்தாலும் அது செயல்படவில்லை. அதனால், மக்களிடம் கிரடிட் கார்டு, டெபிட் கார்டு இருந்தாலும் அது பயன்படாத நிலையில் இருப்பதால் தேவையான பொருட்களை வாங்கமுடியாமல் என்ன செய்வதென்று புரியாமல் தவித்து வருகின்றனர். முப்பது நாட்களுக்கும் மேலாக மக்கள் அவதிப்பட்டு வந்தாலும், கடந்த நான்கு நாட்களாக சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். வங்கிக் கணக்கில் தன் பெயரில் பணம் இருந்தாலும் அதைப் பயன்படுத்த முடியாமல் பட்டினி கிடக்கின்றனர்.
இந்த நிலைக்கு யார் காரணம்?

No comments:
Write comments