அதிமுக-வுக்கு தலைமையேற்க சசிகலாவை, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நேரில் சென்று சந்தித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், அவரது வழியில் அதிமுக-வை தலைமையேற்று வழிநடத்தும்படி, அந்தக் கட்சி நிர்வாகிகள் மட்டுமன்றி தொழிலதிபர்கள், பத்திரிகை மற்றும் டி.வி. நிறுவனங்களின் அதிபர்களும் சசிகலாவை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமையில், பத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் சசிகலாவை சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்கு கண்டனம் தெரிவித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: உயர்கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தவேண்டிய பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள், ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர்களாக மாறி சசிகலாவை சந்தித்ததும், அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியதும், அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அலுவல்ரீதியாகவோ கல்வி வளர்ச்சிபற்றி விவாதிப்பதற்காகவோ முதல்வரையோ, உயர்கல்வி அமைச்சரையோ சந்தித்துப் பேசியிருந்தால் அதில் எந்தச் சிக்கலும் இல்லை. மாறாக, ஆட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சசிகலாவை, கல்வியாளர்கள் என்ற உயர்ந்த நிலையிலுள்ள துணைவேந்தர்கள் சந்தித்து அரசியல் பேசியிருப்பது எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாதது ஆகும். இது மிகவும் வெட்கக்கேடான செயல் ஆகும்.
எந்த அதிகாரப் பொறுப்பிலும் பதவியிலும் இல்லாத சசிகலாவை சந்தித்தது தொடர்பாக துணைவேந்தர்களிடையே எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை ஆகும். இச்சந்திப்பு குறித்து, தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஏ.எம்.மூர்த்தி கருத்து தெரிவிக்கும்போது, ‘பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து அதிக நிதி தேவைப்படுகிறது. அதனால் சசிகலாவை சந்தித்தோம்’ என்று கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களிலும், துணைவேந்தர்கள் நியமனத்திலும் நடைபெறும் அரசியலை இச் சந்திப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திலும் பெருமளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், ஆட்சித் தலைமைக்கு நெருக்கமாக இருப்பவர்களின் ஆசி பெற்றவர்களுக்குத்தான் துணைவேந்தர் பதவி வழங்கப்படுவதாகவும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பது இந்தச் சந்திப்பின்மூலம் உறுதியாகியிருக்கிறது. இனி வரும் காலங்களிலாவது அரசியல் கலப்பற்ற கல்வியாளர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமனம் செய்யும்வகையில் பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று, அவர் கூறியுள்ளார்.

No comments:
Write comments