காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசுகள் தாக்கல் செய்யும் மனுவை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதிகள் குழு
‘காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசுகள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா?’ என்று கேட்டு மத்திய அரசு ஆட்சேப மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரனையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமித்வா ராய், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழு விசாரணை செய்தது.
அப்போது, ‘காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு’ என்று தீர்ப்பளித்தது. மேலும் விசாரணையின்போது, இந்த மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்று கூறி மத்திய அரசு செய்த வாதத்தையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
2,000 கன அடி நீர்
காவிரி நடுவர் மன்ற விவகாரம் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் வரும் 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. அதுவரை, அதாவது டிசம்பர் 15ஆம் தேதி வரை காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு தலா 2,000 கன அடி நீர் வழங்க வேண்டும் என்றும் கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நடுவர் மன்றம்
காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு கடந்த 2௦௦7ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதையடுத்து, காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
நிராகரிப்பு
அப்போது அதை எதிர்த்து, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமித்வா ராய், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழு கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மாநில அரசுகளின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு உள்ளதா என்று விவாதம் நடத்தியது. அதில், உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று முடிவு செய்து அரசின் வாதத்தை நிராகரிப்பு செய்தது.
ஒத்திவைப்பு
இந்த வழக்கின் இறுதி விசாரணையை வருகிற 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் குழு உத்தரவிட்டது. அதுவரை தமிழகத்துக்கு 2,000 கன அடி நீர் வழங்க வேண்டும் என்றும் கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:
Write comments