தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும், வீர விளையாட்டாகவும் திகழும் ஜல்லிக்கட்டிற்கு தடை வாங்கிய அமெரிக்க அமைப்பின் பெயர், 'பீட்டா!'. ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, போராட்டக்களத்தில் குதித்துள்ளவர்களின் முக்கிய கோரிக்கை, இந்தியாவில் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பதே.விலங்கு வதையை தடுப்பதற்கு, 1980 மார்ச் 22ல், உருவான தன்னார்வ அமைப்பு தான் 'பீட்டா.' அமெரிக்காவின் வர்ஜினியாவில் உள்ள நார்போல்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இதனை இன்கிரிடுநியூகிர்க், அலெக்ஸ் பாச்சேகோ என்பவர்கள் தொடங்கினர்.
'மனிதர்களைப் போல, விலங்குகளும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்' என்கிறது இந்த அமைப்பு. ஜல்லிக்கட்டு போன்ற காளைகளை கொண்டாடும் வீர விளையாட்டுக்கள் நடந்தால் தான், காளை இனம் சிறக்கும், மனிதர்களும் கலையை நன்கு கவனித்து பாதுகாத்து வளர்ப்பார்கள் என்பது இந்த அமெரிக்க அமைப்பிற்கு தெரியாதது அல்ல.
இந்த அமைப்பில் உலகம் முழுவதும், சுமார் 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருப்பதாக அவர்களே கூறுகின்றனர். முழுநேர ஊழியர்களாக 389 பேர் இருக்கின்றனர். உறுப்பினராக சேர குறைந்தபட்ச கட்டணமாக, 1000 ரூபாய் வசூலிக்கின்றனர்.
2014-ல் இந்த அமைப்புக்கு, 292 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மிருகங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட அமைப்புக்கு 400 பேர்கள் கைநிறைய சம்பளம் வாங்கும் முழு நேர ஊழியர்களாக இருப்பதும் ஆண்டுக்கு 200 கோடிக்கு மேல் நன்கொடை என்ற பெயரில் வருமானம் கொட்டுவதும் இந்த பீட்டா அமைப்பின் செயல்பாடுகளை உலக மூன்றாம் நாடுகளை சந்தேகம் கொள்ள வைக்கிறது. காரணம் இந்த பீட்டா அமைப்பு மிருக பாதுகாப்பு வேகமான செயல்பாடுகள் அனைத்தும் வளரும் நாடுகளில் மட்டுமே உள்ளது.
எருது சண்டை நடக்கும் பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் எருதுகளை கையில் வாளுடன் தான் அங்குள்ள மாடுபிடி வீரர்கள் எதிர் கொள்வார்கள். அச் சண்டையில் பெரும்பாலான எருதுகள், காளைகள் கொல்லப்படும். அங்கு இந்த பீட்டா அமைப்புகள் வாயை திறப்பதில்லை. இவர்களுடைய ஆட்டமெல்லாம் இந்தியா போன்ற கீழை நாடுகளிடம் மட்டும்தான்.
இதற்காகத்தான் மேற்கத்திய நாடுகளின் தொழிலதிபர்கள் பீட்டாவுக்கு நன்கொடையை வாரி வழங்குகிறார்கள். அப்படி வழங்க வேண்டிய கட்டாயம் என்ன? பலனை எதிர்பாராமல் ஒரு காசையும் மேற்கத்திய தொழில் அதிபர்கள் செலவழிப்பதில்லையே? உலகம் முழுவதும் நன்கொடை பெற்று செயல்படுவதாக கூறும் பீட்டாவின் வருவாய், நடைமுறைகள் குறித்து பல நாடுகளிலும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியாவிலும் இந்த அமைப்பு செயல்படுகிறது. ஆனால் அங்கெல்லாம் எருது, காளை பிடி போட்டிகள் ஆண்டுதோறும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்று வருகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.,) அமெரிக்காவை சேர்ந்த பூர்வா ஜோஷிபுரா உள்ளார். இவர் தன்னாட்சி அதிகாரம் பெற்ற, அரசின் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் நியமன உறுப்பினராகவும் இருக்கிறார்.
இந்தியாவில் 2000 ஜனவரியில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. தலைமையகம் மும்பையில் உள்ளது. உணவுக்காக விலங்குகளைக் கொல்வதை எதிர்ப்பதாகவும், சைவ உணவு முறைக்கு பிரச்சாரம் செய்வதாகவும் இதன் இணைய தளம் தெரிவிக்கிறது. இதற்காக நிறைய தன்னார்வலர்களை தன் இணையதளத்தில் இணைத்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த உதவிடும் வகையில், மத்திய அரசு கடந்தாண்டு வெளியிட்ட அறிக்கைக்கு, உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியதை தங்களது இணையதளத்தில் பெருமையாக வெளியிட்டுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்படி, தங்களது இணையதளத்தில் பொதுமக்களை துாண்டிவிட்டு, தனது வெறுப்பை கொட்டி சேட்டை செய்துள்ளது பீட்டா.
நடிகர் சாகித் கபூர், நடிகைகள் ஹேமமாலினி, ரவீனா டாண்டன், திரிஷா, விஷால் போன்ற திரையுலக விளம்பரம் தேடும் பிரபலங்கள், மேனகா காந்தி, கிரண் பேடி போன்ற பலர் 'பீட்டா' இந்தியா அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மூலம் மூக்கை நுழைத்து மக்களின் வெறுப்பை வாங்கிக்கட்டிக்கொண்ட இந்த பீட்டா அடுத்து தனது விளையாட்டை கேரளாவில் யானைகள் கொடுமைபடுத்தப்படுவதாக ஆரம்பிக்க உள்ளதாம்.
ஆனால் தமிழ்நாட்டில் எழுந்துள்ள காளை, ஜல்லிக்கட்டு ஆதரவு எழுச்சி பீட்டாவின் கோரமான மறுபக்கத்தை உலக நாடுகளுக்கு காட்டி வருவதால் யானை விவகாரத்தை தற்போது கையில் எடுக்க பீட்டா தயங்குகிறது.
கேரளாவில் நாய்கள் பெருத்து அதன் தாக்குதலால் பலர் உயிரிழந்து நாய்கள் மீது கையை வைக்கக் கூடாது என்று கூறியதால் "மனித உயிர்களை விட நாய்கள் மேலா?" என்று மக்களின் கடுங்கோபத்துக்கும், கண்டனங்களும் ஆளான மேனகா காந்தி போன்ற பீட்டா உறுப்பினர்கள் சற்று பம்மியுள்ளனர்.
நன்றி: சுகுமாரன்
No comments:
Write comments