கோடை வெயிலால் ஏற்படும் நோய்களிலிருந்து செலவில்லாமல் தப்ப எளிய வழிமுறைகள் பல உள்ளன. கோடை வெயில் நேரத்தில் ஃபிரிட்ஜில் வைக்கப்படும் குளிர்ந்த நீரை பருகக்கூடாது. இதற்கு பதிலாக மண்பானையில் சுத்தமான தண்ணீரை நிரப்பிவைத்து அதனை அடிக்கடி பருகிவரவேண்டும். இதனால் உடல் சூடு தணிவதுடன் பித்தம் கட்டுப்படுத்தப்படும். வழக்கமாக பருகும் தண்ணீரின் அளவை விட கூடுதலாக இரண்டு மடங்கு பருக வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் போதும் நன்னாரி குளிர் நீரை எடுத்துச் சென்று அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
வியர்வையால் தோல்களில் வியர்குரு உள்ளிட்ட சரும நோய்கள் ஏற்படும், இதனை தவிர்க்க அருகம்புல் சாறு எடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்து காய்ச்சி தைலம் தயாரித்து உடலில் பூசிக்கொள்ளலாம். உணவில் ஜீரகம், காய்கள் , கனி வகைகள் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
உடல் சூட்டால் ஏற்படும் மூல நோய் தவிர்க்க அதிக தண்ணீர் பருகுவதுடன் எலுமிச்சை ஜூஸ் பருக வேண்டும். நீரிழிவு வியாதி இருப்பவர்கள் எலுமிச்சையில் சர்க்கரைக்குப் பதில் உப்பு சேர்த்து பருகலாம். நார் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். காரமான உணவுகளை குறைக்கவேண்டும். தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு என பழங்களை உண்ண வேண்டும்.
வெள்ளரி, கோஸ், பூசணி, வாழைத்தண்டு, கேரட், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை இவைகளை ஜூஸ் செய்து சாப்பிடுங்கள். இவை உங்களை கோடைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
தக்காளி, மாதுளை, நெல்லி போன்றவைகள் கோடைக்காலத்திற்கு கண்கண்ட அமிர்தம் என்பதால் இதனை தினமும் அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள். அதிக அளவு நீர் மோரை குடிக்கலாம்.
சாலட் எனப்படும் பச்சை காய்கறி கலவையை சின்ன வெங்காயம் சேர்த்து தினமும் இரு முறை எடுத்துக்கொள்ளுங்கள். அதிக வியர்வை ஏற்படும் நேரங்களில் கூடுதலாக தண்ணீர் பருகி உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நன்றாக கடைந்த மோர், சிறிய வெங்காயம், வெள்ளரிப்பிஞ்சு, ஆகியவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். செரிமான சக்தி குறைவாக உள்ள திட மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து நீர் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Write comments