அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தி.மு.க தலைவர் மு. கருணாநிதி தெரிவித்தார்.
திருவாரூருக்கு நேற்று காலை வந்த கருணாநிதிக்கு, ரயில் நிலையத்தில் தி.மு.க. வினர் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், சன்னதி தெருவில் உள்ள அவரது அக்கா வீட்டில் ஓய்வெடுத்த கருணாநிதி, கட்சி நிர்வாகிகளுடன் அங்கு ஆலோசனை நடத்தினார்.
மாலையில் விளமல், தேவர் கண்டநல்லூர், குளிக்கரை, அம்மையப்பன் உள்ளிட்ட பகுதிகளில், வேனில் இருந்தபடி வாக்குசேகரித்து கருணாநிதி பேசியதாவது: திருவாரூரில் கடந்த முறை என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். மண்ணின் மைந்தராக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக மீண்டும் இங்கு போட்டியிடுகிறேன். உயிருள்ளவரை மக்களுக்காக உழைப்பேன். திருவாரூரில் கிடப்பில் போடப்பட்ட அரைவட்ட சுற்றுச்சாலை பணி விரைவுபடுத்தப்படும். எனது முயற்சியால், தமிழகத்தில் வேறெங்கும் இல்லாதவகையில் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் கொண்டுவரப்பட்டது. அதேபோல, ரூ.100 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டது.
ஓடாமல் இருந்த ஆழித்தேரை விஞ்ஞான ரீதியில் ஓடவைத்தேன். எனது முயற்சியால் திருவாரூரில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. மன்னார்குடி சாலையில் தேவர்கண்டநல்லூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். ஒட்டகுடி வாய்க்கால் தூர் வாரப்படும். சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தோம். சிறு, குறு என்று பிரிக்காமல் அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்று, அனைத்து விவசாயிகளும் பெற்ற பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளைக் காப்பாற்றாத அ.தி.முக அரசை தோற்கடிக்க நீங்கள் தயாராக வேண்டும்.
கடந்த தி.மு.க ஆட்சியில் விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், அ.தி.முக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலைகள்தான் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, முகுந்தனூர், எண்கண், காப்பனாமங்கலம், அரசவனங்காடு, மணக்கால், திருக்கண்ணமங்கை, பவித்திரமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments