ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை விமர்சித்த சுப்பிரமணியன் சுவாமி பிரதமரின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார விவகார செயலாளர் சக்திகாந்த தாஸ் ஆகியோரையும் விமர்சனம் செய்து வந்தார்.
இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்திருந்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தம்முடைய கருத்துகளில் சுய கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.
இதற்கு தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள சுப்பிரமணிய சுவாமி, அருண் ஜெட்லியின் பெயரை குறிப்பிடாமல், சிலர் சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் பற்றி தாம் கேட்காமலே அறிவுரை சொல்கிறார்கள். நான் ஒழுங்கீனமாக நடக்க நினைத்தால் ரத்த ஆறுதான் ஓடும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை எனக் கூறியிருக்கிறார்.
அத்துடன் அருண் ஜெட்லி சீனா பயணத்தின்போது அணிந்திருந்த கோட்-சூட்டையும் சுப்பிரமணியன் சுவாமி மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.
வெளிநாட்டு பயணத்தின்போது, நமது பாரம்பரிய உடைகளையும், நவீன இந்திய உடைகளையும் மட்டுமே அணியுமாறு மத்திய அமைச்சர்களுக்கு பாஜக அறிவுறுத்த வேண்டும். கோட் மற்றும் டை அணிந்து ஹொட்டல் வெயிட்டர்கள் போலவே இருக்கிறார்கள் என்றும் போட்டுத் தாக்கியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
பாஜக எம்.பி.யாக இருந்து கொண்டே தொடர்ச்சியாக மத்திய அரசு அதிகாரிகளையும் அமைச்சர்களையும் வரம்பின்றி விமர்சித்து வருகிறார் சுப்பிரமணிய சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments