ராம்குமாருக்கு ஃபேஸ்புக் பக்கத்தில் 379 நண்பர்கள் இருந்தனர். சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டதால் அவரது நண்பர்கள் எண்ணிக்கை 292ஆக குறைந்துள்ளது. நமக்கு எதற்கு வம்பு என்று அவரது ஃபேஸ்புக் நண்பர்கள் தொடர்பிலிருந்து விலகி வருகிறார்கள்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஜினீயர் சுவாதியை கொலை செய்த வழக்கில் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமாரை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்த அவரது உறவினரும், வழக்கறிஞமான ராமராஜ், ஃபேஸ்புக் மூலமாகவே ராம்குமாருக்கு சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலை தெரிவித்தார். ஆனால் ராம்குமாரின் ஃபேஸ்புக் நட்பு வட்டாரத்தில் சுவாதி என்ற பெயர் இல்லை. மேலும், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், ஆகஸ்ட் 12 2015க்குப் பிறகு எந்தப் பதிவும் செய்யப்படவில்லை. அன்றைய தினத்தில் ராம்குமார், தன்னுடைய புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார். அதற்கு லைக்ஸ் நிறைய கிடைத்துள்ளது. கல்லூரியின் அழகன், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், டான், மாப்பிள்ளை என்று பல கமெண்ட்ஸ் வந்துள்ளன.
சுவாதிக்கும், ராம்குமாருக்கும் ஃபேஸ்புக் மூலமே பழக்கம் ஏற்பட்டதாக தெரியவந்தாலும், இருவரையும் அறிமுகப்படுத்தியது சூர்யபிரகாஷ் என்ற பெயரைச் சொன்னது தனிப்படை போலீஸ். அந்த பெயரிலும் ராம்குமார் ஃபேஸ்புக்கில் யாரும் நண்பர்கள் இல்லை. சூர்ய லக்கி, சூர்ய சந்திரன், சூர்யபாலன் ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறார்கள். யார் அந்த சூர்ய பிரகாஷ் என்ற கேள்விக்கு இதுவரை போலீஸ் தரப்பில் பதில்இல்லை.
இதற்கிடையில் சுவாதியை ராம்குமார் கொன்றதாக போலீஸார் கைது செய்தவுடன் அவரது ஃபேஸ்புக் நண்பர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. கடந்த ஜூலை 4ம் தேதி அன்று ராம்குமாரின் ஃபேஸ்புக் பக்கத்தில் 379 நண்பர்கள் இருந்தனர். ஜூலை 9ம் தேதி அந்த எண்ணிக்கை 292ஆக குறைந்துள்ளது. நமக்கு எதற்கு வம்பு என்று அவரது ஃபேஸ்புக் நண்பர்கள் தொடர்பிலிருந்து விலகி வருகிறார்கள். கொலை நடந்தவுடன் போலீஸார், சுவாதியின் ஃபேஸ்புக், செல்போன் நம்பரின் டூப்ளிகேட் சிம் ஆகியவற்றை கொண்டு குற்றவாளியை தேடினர். இதன்பிறகு சுவாதியின் ஃபேஸ்புக் முடக்கப்பட்டு அதில் உள்ள விவரங்கள் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. டூப்ளிகேட் சிம் மூலம் சுவாதியுடன் பேசியவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தின் உதவியுடன் அவரது இன்கம்மிங், அவுட்கோயிங் கால்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதுதொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணை தகவல்கள் தனிப்படை போலீஸ் உயரதிகாரிகளைத் தவிர வேறுயாருக்கும் தெரிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதில் பல முக்கிய தகவல்கள் போலீசுக்கு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சுவாதி கொலை வழக்கை விரைந்து முடிக்க முயற்சிகள் போலீஸ் தரப்பில் நடந்தாலும், ராம்குமாரை இந்த வழக்கிலிருந்து விடுவிடுக்க வழக்கறிஞர்கள் குழு களமிறங்கவுள்ளது. ஏற்கெனவே ராம்குமாருக்காக ஜாமீன் மனுவுக்கு ஆஜராகிய வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி விலகியதும், புதிய ஜாமீன் மனுவை இந்த குழு தாக்கல் செய்யவுள்ளது. ராம்குமாரின் பெற்றோரின் அனுமதியில்லாமல் வேறுயாரும் அவரை சிறையில் சந்திக்க கூடாது என்பதிலும் இந்த குழு கவனம் செலுத்தியுள்ளது.
தனிப்படை போலீஸாரை பொறுத்தவரைக்கும் கொலைக்கு தேவையான ஆதாரங்கள், சாட்சிகள் எங்களிடம் வலுவாக உள்ளது. அதை நீதிமன்றத்தில் சமர்பித்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுப்போம் என்கிறார்கள் உறுதியாக. மேலும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் மட்டுமே குற்றவாளி. வேறு யாருமில்லை என்பதிலும் போலீஸ் தெளிவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் சுவாதியின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றின் விவரங்களை போலீசார் வெளியிட மறுத்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments