ரியோ ஒலிம்பிக் போட்டியின் 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் மற்ற போட்டிகளைவிட தடகளப் போட்டிகளுக்குத்தான் எப்போதுமே முக்கியத்துவம் அதிகம். ரியோ டி ஜெனீரோவில் உள்ள ஜுவா ஹாவேலாஞ்சே மைதானத்தில் நடைபெறும் தடகளப் போட்டிகள், ஒலிம்பிக்கின் கடைசி நாளான 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 47 பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
கடந்த ஒலிம்பிக்கைப் போலவே இந்த ஒலிம்பிக்கிலும் உலகின் மின்னல் வேக மனிதரான உசேன் போல்ட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த இரு ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆடவர் 100 மீ., 200 மீ. ஓட்டம் மற்றும் 4*100 மீ. தொடர் ஓட்டங்களில் தங்கம் வென்றுள்ள போல்ட், இந்த முறையும் மேற்கண்ட மூன்றிலும் வென்று ஹாட்ரிக் சாதனை படைப்பதில் தீவிரமாக உள்ளார். மேற்கண்ட 3 போட்டிகளிலும் உலக சாதனையும் போல்ட் வசமே உள்ளது.
இன்று நடைபெற்ற 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் பெற்றார். 9.81 விநாடிகளில் இலக்கை எட்டினார். அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின் வெள்ளிப் பதக்கம் (9.89) பெற்றார். கனடாவின் ஆண்ட்ரே கிரேஸுக்கு வெண்கலம் (9.91) கிடைத்தது.

No comments:
Write comments