ஒரு நாட்டின் பயங்கரவாதி இன்னொரு நாட்டிற்கு கதாநாயகனாக இருக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்னாத் சிங் தெரிவித்துள்ளார்.
திரங்கா பேரணியில் இன்று பங்கெடுத்த ராஜ்னாத் சிங் கூறியதாவது "கஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதற்கு பாகிஸ்தானே காரணம். இதனை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இதனை சொல்வதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சமீபத்தில் நான் பாகிஸ்தானிற்கு சென்றது உங்கள் அனைவருக்கும் தெரியும். அங்கு என்ன நடந்தது என்பதும் உங்களுக்கு தெரியும். அங்கு என்ன நடந்தது என்பதை திரும்ப திரும்ப சொல்ல வேண்டியதில்லை. ஆனல் அங்கு சென்ற நான் ஒன்றை மட்டும் தெளிவாக அவர்களுக்கு உணர்த்திவிட்டு வந்தேன்.அதாவது ஒரு நாட்டின் தீவிரவாதி மற்றொரு நாட்டிற்கு கதாநாயகனாக இருக்கவே முடியாது என்று.
நான் கஷ்மீர் மக்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். நாங்கள் கஷ்மீரை மட்டுமல்ல அங்குள்ள மக்களையும் நேசிக்கிறோம். உங்கள் கைகளில், கற்கள், கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை, மாறாக உங்கள் கைகளில் பேனாக்கள் இருக்க வேண்டும், லேப்டாப்கள் இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் நல்ல உத்தியோகத்தில் இருக்க வேண்டும் அதுவே எங்களது விருப்பம் என ராஜ்னாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிரச்சனைகளுக்கு வன்முறை ஒருபோதும் தீர்வை கொடுக்காது. முதலில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். பிறகு பேச்சுவார்த்தையின் மூலம் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை காணலாம். சில பேர் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பார்சிகளுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார்கள். இதையே ஆங்கில அரசும் செய்தது. ஆனால் இது கண்டிப்பாக வெற்றி பெறாது. யாராலும் இந்திய மக்களின் ஒற்றுமையை பிரிக்க இயலாது என ராஜ்னாத் சிங் கூறினார்.
நாம் இந்தியாவை வளமான தேசமாக உருவாக்க வேண்டுமானால், ஜாதி, மதம் போன்ற எந்த பாகுபாட்டையும் பார்க்காமல் அனைவரும் ஒன்றினைந்து முன்னோக்கி செல்ல வேண்டும். ஆங்கில அரசு இந்தியாவை ஆட்சி செய்யும் போது மதத்தின் பெயரால சமூக மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தினார்கள். ஆனால் அவர்களுடைய அனைத்து சூழ்ச்சிகளையும் சுதந்திர போராட்ட வீரர்கள் உடைத்து சுக்கு நூறாக்கிவிட்டனர். உதாரணத்திற்கு அஸ்பகுல்லா கான் மற்றும் ராம்பிரசாத் ஆகியோர் இணைந்தே சுதந்திரத்திற்காக போராடினர்.
இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு நன்றாகவே தெரியும். இந்தியாவில் தான் 72 விதமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்றும். உலகின் வேறு எந்த தேசத்திலும் ஏன் இஸ்லாமிய நாடுகளில் கூட இவ்வாறு இல்லை. அதே போன்று தான் கிறித்தவர்களிலும் என்றார் ராஜ்னாத் சிங்.
சீனாவோ பாகிஸ்தானோ இந்தியாவிற்கு எதிராக எல்லை பயங்கரவாத்தை நடத்தினால் இந்தியர்கள் அனைவரும் ஒன்றினைந்தே இதுவரை எதிர்கொண்டுள்ளோம்" என அமைச்சர் ராஜனாத் சிங் தெரிவித்தார்.

No comments:
Write comments