எங்கம்மாவோட புருஷன் தான் எங்க அப்பா என்கிற ரீதியில் யாராவது சொன்னால் அவரை என்னவென்று நினைப்போம்? அது போலத்தான் இருக்கிறது ராகுல் காந்தியின் விளக்கம். சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீது குற்றஞ்சாட்டிய அவர் நீதிமன்றத்தின் தொடர் நெருக்கடிக்கு பிறகு, நான் அப்படி சொல்லவில்லை என ஜகா வாங்கியிருக்கிறார்.
மகாத்மா காந்தியை ஆர்எஸ்எஸ் அமைப்பு கொலை செய்ததாக தெரிவிக்கவில்லை; அந்த அமைப்புடன் தொடர்புடைய நபர்கள்தான் காந்தியின் கொலைக்கு காரணம் என தெரிவித்தேன்'' என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், சோனாலேயில் கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியபோது, தேசப் பிதா மகாத்மா காந்தியின் கொலை தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பிவாண்டி பகுதி ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜேஷ் மகாதேவ் குந்தே என்பவர் அங்குள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதியன்று விசாரணையில் நேரில் ஆஜராகும்படி ராகுல் ராந்திக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார். ஆனால், மும்பை உயர் நீதிமன்றம் ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மேல்முறையீடு மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஸ். நாரிமன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிடுகையில், "மும்பை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், மகாத்மா காந்தியை கொலை செய்தது ஆர்எஸ்எஸ் அமைப்புதான் என்று நான் கூறவில்லை; காந்தியின் கொலைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் என்று தெரிவித்தேன் என்று கூறியுள்ளார். இந்த பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றம் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்' என்றார்.
மகாத்மா காந்தியை ஆர்எஸ்எஸ் அமைப்பு கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர் (ராகுல் காந்தி) கூறவில்லை என்பதையும், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களே காந்தியின் கொலைக்கு காரணம் என கூறினார் என்பதையும் அறிகிறோம். குற்றம்சாட்டப்பட்டவரின் விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கும்பட்சத்தில், வழக்கை முடித்துக் கொள்வதற்கு மனுதாரர் தயாரா? என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.
எனவே, இதுகுறித்து மனுதாரரின் கருத்தை அறிந்து வந்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி அவரது வழக்குரைஞர் யூ.ஆர். லலித்தை கேட்டுக் கொள்கிறோம் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, அந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:
Write comments