நான் மத்திய அரசின் தூதர் அல்ல என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
ஆக்ராவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது ஆசிரியர்கள் பலர் கோரிக்கைகளையும், புகார்களையும் தன்னிடம் தெரிவித்ததை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்துக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ள மோகன் பாகவத் ஆக்ராவில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் சனிக்கிழமை கலந்துகொண்டார். அப்போது ஆசிரியர்கள் அவரிடம் ஏராளமான கோரிக்கையும், புகார்களையும் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:
மாணவர்களை தலைசிறந்தவர்களாக உருவாக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு.
கல்வித் துறையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவற்றைத் தீர்க்கும் அதிகாரமுள்ள மத்திய அரசில் நான் அங்கம் வகிக்கவில்லை. ஆர்எஸ்எஸ் என்பது தனி அமைப்பு.
நான் மத்திய அரசின் அங்கம் என்று உங்களில் பலர் நினைத்து வருகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. நான் மத்திய அரசின் தூதர் அல்ல. எனவே, ஆசிரியர்களாகிய உங்களது ஓய்வூதியம், பணியிடமாற்றம், பணியில் உள்ள பிரச்னைகள் உள்ளிட்டவற்றில் என்னால் உதவ முடியாது. உங்கள் பிரச்னைகள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்குக் கடிதம் எழுதுங்கள். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார்.
நாட்டில் மற்ற மதத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஹிந்துக்களின் எண்ணிக்கை மட்டும் ஏன் குறைய வேண்டும். ஹிந்துக்களின் எண்ணிக்கை உயரக் கூடாது என்று எந்த சட்டத்திலாவது கூறப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை 2,000 இளம் தம்பதிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், "குடும்ப அமைப்பு முறையின் மதிப்பையும், பாரம்பரியத்தையும் கட்டிக்காக்கும் வகையில் கணவனும், மனைவியும் செயல்பட வேண்டும். குழந்தைகளை நாட்டுப்பற்றுள்ளவர்களாக வளர்க்க வேண்டும்' என்றார்.
காங்கிரஸ் எதிர்ப்பு: ஹிந்து மக்கள்தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற பாகவத்தின் பேச்சுக்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மூத் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவரிடம் இதுபோன்ற பேச்சுகளைத் தவிர வேறு எதை எதிர்பாக்க முடியும். சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் வகையில் அவரது பேச்சுகள் அனைத்தும் அமைகின்றன.
நாட்டின் முக்கியப் பிரச்னைகளான வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றை குறித்து பேசலாம். ஆனால், பாகவத் அதைப்பற்றி எல்லாம் பேச மாட்டார் என்றார் அவர்.

No comments:
Write comments