"செவாலியே" விருது பெற்றுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு, வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. அதே நேரத்தில், 2002ம் ஆண்டே இலக்கியத்திற்காக செவாலியே விருதையும், அதற்கும் உயரிய விருதான "ஒபிசியே" விருதையும் புதுச்சேரியை சேர்ந்த பேராசிரியை ஒருவர் பெற்றுள்ளார். வெளிச்சத்திற்கு வராத அந்த நல்முத்து பற்றி பார்ப்போம்.
பிரான்ஸ் அரசு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து "செவாலியே" விருது வழங்கி கவுரவித்து வருகிறது. திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக தற்போது நடிகர் கமல்ஹாசன் இந்த செவாலியே விருதைப் பெற உள்ளார்.
இந்த நேரத்தில் 2002 ஆம் ஆண்டே செவாலியே விருதையும், அதை விட உயர்ந்த விருதான ஒபிசியே விருதையும் புதுச்சேரியைச் சேர்ந்த பேராசிரியை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். புதுச்சேரி பிரெஞ்சு கல்லூரியில் 41 ஆண்டுகாலம் பணி புரிந்து ஒய்வு பெற்ற பேராசிரியையான மதன கல்யாணி தான் வெளிச்சத்திற்கு வராத இந்த நல்முத்து.
தமிழ் மொழியை பாடமாக தேர்ந்தெடுக்கும் அயல்நாட்டு மாணவர்களுக்கு தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, அவர்களின் வாழ்க்கை முறையை கற்பித்த மதன கல்யாணி, பிரஞ்சு மொழியில் முதுகலையும், தமிழ்மொழியில் புலவர் பட்டமும் பெற்றவர்.
இரு மொழிகளிலும் 20 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். புதுச்சேரி நாட்டுப்புறப்பாடல், நாட்டுப்புற கதைகள், சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ என்ற நூலை பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்துள்ளார். ஒபிசியே விருதை முதன்முறையாக பெற்ற இந்திய பெண்மணி என்ற பெருமையையும் பேராசிரியை மதன கல்யாணி பெற்றுள்ளார்.
செவாலியே, ஒபிசியே விருது வென்ற ஒரே இந்திய பெண்மணியும், பேராசிரியைமான மதன கல்யாணியை புதுச்சேரி அரசு சிறப்பிக்க வேண்டும் என்பதே அந்த மாநில மக்களின் கோரிக்கை.
No comments:
Write comments