பி.வி சிந்துவிற்கு வெளிநாட்டு பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என தெலுங்கானா மாநில துணை முதல்வர் கூறிய கருத்துக்கு பி.வி சிந்து மற்றும் அவரது பயிற்ச்சியாளர் கோபிசந்த் பதில் அளித்துள்ளனர்.
ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் அவரது பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் 22-ம் தேதி ஐதராபாத் திரும்பினார்கள். அவர்களுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் திறந்த பேருந்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். மாலையில் சிந்துவிற்கும், கோபிசந்திற்கும் பரிசு வழங்கப்பட்டது.
ஐதராபாத்தில் சிந்துவை வரவேற்க வந்திருந்த தெலுங்கானா மாநில துணை முதலமைச்சர் முகமது அலி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
”நாங்கள் சிந்துவிற்கு சரியான பயிற்சியை கொடுக்க விரும்புகிறோம். நாங்கள் வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க திட்டமிட்டு உள்ளோம், பயிற்சியின் காரணமாக அவர் தங்கம் வெல்ல முடியும்,” என்று கூறினார்.
முகமது அலியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை எழுப்பியது. கோபிசந்த் இந்தியாவிற்கு இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வாங்கி தந்த பயிற்சியாளர் ஆவார். கோபிசந்திடம் பயிற்சி பெற்ற சாய்னா நெக்வால் கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார். இந்நிலையில் தெலுங்கானா துணை முதலமைச்சரின் இப்பேச்சு பெரும் சர்ச்சையாகியது. இவ்வாறு பேசிய முகமது அலியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் முகமது அலியின் சரியான பயிற்சியாளர் கருத்து தொடர்பாக பிவி சிந்து பேசுகையில், ”எனக்கு கோபி சார் தான் நல்ல பயிற்சியாளர், வேறு எதுவும் சொல்வதற்கு நான் விரும்பவில்லை,” என்று கூறிவிட்டார். கரோலின் மரின் உண்மையாகவே சிறப்பாக ஆடினார், அது அவருடைய நாள். அடுத்த மாதம் நடைபெற உள்ள சூப்பர் சிரியஸ் போட்டிக்கு தயாராகி வருகின்றேன், என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று சிந்து மகிழ்ச்சி பொங்க கூறிஉள்ளார்.
இது தொடர்பாக கோபிசந்த் பேசுகையில், ’அவர் தெரியாமல் கூறியிருக்கலாம், சாதகமான விஷயங்களில் கவனம் செலுத்த இருக்கின்றேன்,” என்று கூறிஉள்ளார்.

No comments:
Write comments