தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது காயல்பட்டணம் என்கிற நகராட்சி.
ஒற்றுமைக்கும், சமத்துவத்திற்கும், கலாச்சாரத்திற்கும் பெயர்போன காயல்பட்டணத்தின் சரித்திரம் உலகம் அறிந்ததே. மிக நீண்ட நாட்களாக பேருந்து சம்பந்தமான பிரச்னையை மக்கள் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார்கள். மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பெருநகரங்களில் இருந்து வரும் பேருந்துகள் காயல்பட்டணம் வழியாக செல்லாமல் குறுக்குப்பாதையில் திருச்செந்தூர் செல்வதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டியும், இதனால் காயல்பட்டணம், எல். ஆர். நகர், இரத்தினாபுரி மற்றும் சுற்றுவட்டார மக்கள் இரவு நேர பயணத்தில் பொது பெரும் சிரமம் அடைவதாகவும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அருகாமையில் இருக்கும் ஊர்களில் மக்களை கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இன்றி இறக்கிவிட்டு செல்வதாகவும், தன் அடிப்படை உரிமையை கேட்கும் மக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், இதனால் குடும்பங்களுடன் வரும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் தெரிவித்தனர்.
வாட்ஸ்ஆப் குழுமம்:
அரட்டை அடிப்பதற்காகவும், தேவையற்ற மீமீஸ் மற்றும் கலந்துரையாடல்கள் செய்வதற்காக மட்டுமே இன்றைய இளைஞர்களை ஆட்கொண்டு இருந்த சமூக வலைதலமான வாட்ஸ்ஆப்பை மக்களுக்கு பயனுள்ளதாகவும் பயன்படுத்த முடியும் என்று இன்று நிரூபித்துள்ளார்கள் காயல்பட்டணம் மக்கள். தொடர்ந்து பல சமூக ரீதியான பிரச்சனைகளை சந்தித்த காயல்பட்டணம் மக்கள் தங்களுக்கென "நடப்பது என்ன?" என்ற ஒரு வாட்ஸ்ஆப் குழுமத்தை துவங்கி பல பிரச்சனைகளை அதில் விவாதிக்க தொடங்கினர். "நடப்பது என்ன?" போன்று "காயல் தகவல்" மற்றும் இன்னும் சில சமூக அக்கறையுள்ள வாட்ஸ்ஆப் குழுமமும் காயல்பட்டணத்தில் இயங்கி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதில் முதலில் கையில் எடுத்த பிரச்சனைதான் பேருந்து ஊருக்குள் வராமல் செல்வது. இந்த பிரச்சனைக்காக பல ஆய்வுகள் செய்து, ஆதாரங்களை திரட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊரின் தலைவி மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அனைவரையும் சந்தித்து மனு கொடுத்து ஒருவழியாக வெற்றியும் பெற்றனர். இதை தொடர்ந்து பேருந்துகள் ஒருவழியாக காயப்பட்டணம் வந்து பின்னர் திருச்செந்தூருக்கு சென்றது. இதனால் காயல்பட்டணம் மட்டும் அல்லாது சுற்றுவட்டார மக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
விடாமல் துரத்திய பேருந்து பிரச்சனை:
"கடவுள் தந்தாலும் பூசாரி விடமாட்டார்" என்று நம் ஊரின் பழமொழிக்கேட்ப பேருந்தை காயல்பட்டணம் வழியாக இயக்க அரசு ஆணையிட்டாலும், பேருந்தின் ஒருசில ஓட்டுநர், நடத்துனர்கள் இதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும், இப்போது பேருந்துகள் காயல்பட்டணம் வந்தாலும், பயண சீட்டு திருச்செந்தூர் வரையில் கொடுக்கப்படுவதாகவும் மக்கள் புகார் அளித்தனர்.
இது சம்பந்தமாக "நடப்பது என்ன?" குழும அட்மின்களில் ஒருவர் நமக்கு அளித்த பேட்டியில்:-
இதுபோன்று திருச்செந்தூர் வரையில் நாங்கள் பயண சீட்டு பெற்றுக்கொண்டால், அரசு கணக்கெடுப்பின் மூலம் திருச்செந்தூருக்கே அதிக பயணிகள் இருப்பதாகவும், காயல்பட்டணம் வழித்தடத்தில் பயணிகள் குறைவு போன்ற ஒரு மாயையை உருவாக்க முயற்சி செய்வதாலேயே இந்த அணுகுமுறையை நாங்கள் எதிர்ப்பதாகவும், வெற்றி கிடைக்கும் வரை அறவழியில் போராட போவதாகவும் தெரிவித்தார்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:
இதை தொடர்ந்து காயல்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் அரசின் கவனத்தை ஈர்க்க "நடப்பது என்ன? வாட்ஸ்ஆப்" குழுமத்தின் தலைமையில் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்து, முறையாக அனுமதி பெற்று, முறையே இன்று காலை 11.00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், வியாபார பெருங்குடி மக்கள், இளைஞர்கள், காயல்பட்டணம் நகராட்சி தலைவி உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
அறவழியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், இறைவனின் பேரருளால் மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளதாகவும், வெற்றிக்கான விதை இது என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை அடுத்து திருச்செந்தூரில் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். தன் அடிப்படைத் தேவைகளுக்கான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி காயல்பட்டணம் மக்கள் கோஷங்களுடன் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து காயல்பட்டணத்தில் சந்தைகள் மற்றும் பஜார்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
செய்தி :: சாஹிப்...








அருமையான செய்தி தொகுப்பு ...உள்ளதை உள்ளபடியே வழங்கிய ஆன்லைன் ஊடகத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
ReplyDeleteஎமது தாய் மண்ணின் செய்தியை உலகுக்கு பறைசாட்டிய ஆன்லைன் ஊடகத்துக்கு நன்றிகள் பல!
ReplyDeleteஎமது காயல் செய்தியை உலகுக்கு உணர்த்திய ஆன்லைன் ஊடகத்துக்கு நன்றிகள் பல!!
ReplyDelete