இலங்கை அரசுக்கு எதிராக தனிகட்சி துவங்கினால் பல சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என இலங்கை அதிபர் ஸ்ரீசேனா முன்னாள் அதிபர் ராஜபக்சேவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் ஆளும் சுதந்திர கட்சியில் அதிபர் ஸ்ரீசேனாவின் தலைமையை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் விசுவாசிகள் சிலர் ஏற்காமல் எதிர்ப்பு அணியாக செயல்படுகின்றனர். ராஜபக்சே தலைமையில் புதிய கட்சி தொடங்குவது பற்றி சிந்தித்து வருவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் மாத்தறையில் நடைபெற்ற தேசிய அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் மைத்திரி பால ஸ்ரீசேனா கூறும்போது " இலங்கையில் ராஜபக்சே தனிக்கட்சி ஆரம்பித்தால் அதன் உறுப்பினர்கள் பல சோதனைகளை சந்திக்க நேரிடும். அதன் உறுப்பினர்களின் பல இரகசியங்களை வெளியிடுவதற்கும் நான் தயாராகவே உள்ளேன். அப்படி நான் வெளியிட்டுவிட்டால் இப்போது அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதைபோன்று நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்பதை எச்சரிக்கிறேன்.
இந்த அரசாங்கம் இன்னும் 5 வருடங்களுக்கு பலமிக்க அரசாங்கமாகவே கொண்டு செல்லப்படும் 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசாங்கத்தை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும். ஊழல், திருட்டு, குற்றங்களை செய்வோருக்கு இனிமேலும் நாட்டை ஆட்சி செய்ய இடமளிக்கப்போவதில்லை. எமது ஆட்சியை கவிழ்க்க புதிய கட்சி ஆரம்பிக்கிறார்களாம். ஆரம்பித்து பார்க்கட்டும். அவர்கள் செய்த அனைத்து குற்றங்களையும் அவர்கள் ஆட்சியில் இருந்த போது எவ்வாறு வெளியிடுவேனோ அது போன்று பல இரகசியங்களை நான் வெளியிட்டால் அவர்களால் என்றைக்குமே நாட்டை ஆட்சி செய்ய முடியாது" என ஸ்ரீசேனா தெரிவித்துள்ளார்.
அப்படியானால் நமக்கு ஸ்ரீசேனாவை நோக்கி கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது. தம்முடைய ஆட்சிக்கும் குந்தகம் ஏற்பட்டால் மட்டுமே குற்றவாளிகள் தொடர்பான இரகசியங்களை வெளியிடுவேன் என்று சொல்வது எந்த வகையான நிலைபாடு? அப்படி ஆட்சிக்கு குந்தகம் ஏற்படவில்லை என்றால் குற்றவாளிகள் தொடர்பான இரகசியங்களை மறைப்பீர்களா..? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. தன்னுடைய ஆட்சி மட்டுமே முக்கியம் என்றே பல ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள் ஸ்ரீசேனாவைப்போல...

No comments:
Write comments