காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பெரிய மனசுதான். காரணம் மன்னிப்பு கேட்டு செய்த தவறை உணர்ந்தால் ஜி.கே வாசனை மீண்டும் கட்சியில் சேர்ப்போம் என தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் வைத்து நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பத்திரிகையாளர்களிடத்தில் பேசியதாவது, " சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. இது தமிழக முதல்வரின் உத்தரவு தான். சபாநாயகர் பிறப்பித்த உத்தரவாக தெரியவில்லை. இப்படியே போய் கொண்டிருந்தால் இனி சட்டப்பேரவை கூட்டத்தை போயஸ் தோட்டத்தில் நடத்த வேண்டும்.
மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை நேரில் சென்று வலியுறுத்த வேண்டும். நான் எனது பதவியை ராஜினாம செய்துவிட்டேன். அதை அவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இனி அந்த பதவிக்கு நான் வர வாய்ப்பு இல்லை. விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் நியமிக்கப்படுவார். உள்ளாட்சி தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும். ஜி.கே வாசனுக்கு காங்கிரஸில் இணைவதை தவிர வேறு வழியில்லை. தங்களது தவறை உணர்ந்து அவர்கள் வருவதாக தெரிவித்தால் காங்கிரஸ் தொண்டர்கள் பெருந்தன்மையுடன் மன்னித்து ஏற்றுக்கொள்வார்கள்.
இலங்கையில் முகாம்களில் இருந்த விடுதலைப்புலிகளுக்கு விஷஊசி போட்டு கொல்லப்பட்டது உண்மை என்றால், சம்பந்தப்பட்ட வர்களுக்கு தீவிரவாதிகளுக்கு நிகரான தண்டனை வழங்க வேண்டும்'' இவ்வாறு தெரிவித்தார்.

No comments:
Write comments