கோவை வடவள்ளி வேளான் பல்கலைகழக முன்னாள் பேராசிரியர் காமராஜ். இவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஈஷா யோகா மையத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார். அதில் தனது இரு பெண் பிள்ளைகளையும் மூளை சலவை செய்து அவர்களுக்கு மொட்டை அடித்து சாமியார்களாக மாற்றிவிட்டனர் என குற்றஞ்சாட்டியுள்ளர். ஈஷா யோகா மையத்திற்கு எதிராக இது மாதிரியான புகார்கள் வருவது புதிதல்ல. யோகா வகுப்பிற்கு வருபவர்களை ஆசிமரத்திற்குள் அழைத்து அவரின் சூழ்நிலைகளை நன்கறிந்து கொண்டு அவர்களை மூளைச்சலவை செய்து சன்னியாசி ஆக்கிவிடுகின்றனர். இதுதொடர்பாக, எத்துனையோ புகார்கள் காவல் நிலையத்தில் கொடுத்தால் அதனை கண்டுகொள்ளாமல் குப்பைத்தொட்டியில் வீசியுள்ளனர். இருந்த போதிலும் ஓரிரு புகார்கள் மட்டும் மூத்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டிருக்கிறது. அந்த வகையில் திரு.காமராஜ் அளித்த புகாரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காமராஜ் தனது மனைவி சத்தியஜோதி, மகள்கள் கீதா மற்றும் லதா ஆகியோருடன் யோகா கற்க ஈஷா மையத்திற்கு சென்றிருக்கிறார். 3 நாட்கள் நடத்தப்பட்ட யோகா வகுப்பில் காமராஜின் இரு மகள்களும் வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளனர். அன்றிலிருந்து ஒரு வார வகுப்பு, 10 நாட்கள் வகுப்பு, ஒரு மாத வகுப்பு என தொடர்ந்து ஈஷா மையத்திற்கு அவர்கள் சென்று வந்திருக்கின்றனர். இப்படியே நாட்கள் செல்லச்செல்ல அங்கையே அவர்களுக்கு சில பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் அங்கேயே தங்கி சேவை செய்துவந்ததாக கூறப்படுகிறது. மாத்திற்கு ஒரு நாள் மட்டுமே வருவதும், இதுதவிர அவ்வப்போது தனது பெற்றோர்களுடன் தொலைபேசியி பேசிவந்துள்ளனர்.
தற்போது சமீபகாலமாக லதா மற்றும் கீதா ஆகிய இருவரும் வீட்டிற்கு வரவேயில்லை என சொல்லப்படுகிறது. மகள்கள் தொலைபேசியிலும் தொடர்புகொள்ளவில்லை என்பதால் ஈஷா மையத்திற்கு நேரடியாக சென்று சந்திக்கச்சென்றிருக்கிறார் காமராஜ். ஆனால் ஈஷா மையத்தின் நிர்வாகிகளை அவரை தன் மகளை பார்ப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தன் மகள்களை சந்தித்த காமராஜ் அதிர்ச்சியில் உரைந்து போனார். காரணம் அவர்கள் இருவரும் மொட்டை அடிக்கப்பட்டு சன்னியாசி நிலையில் இருந்தனர். "இனி உங்களை சந்திக்க விரும்பவில்லை, எங்களை பார்க்க இங்கு வரவேண்டாம்" என கூறியிருக்கின்றனர்.
தங்கள் மகள்களை மூளைச்சலவை செய்து சன்னியாசி ஆக்கி, தன்னுடைய சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடப்பதாக காமராஜ் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர்களை சந்தித்து பேசும்போது "வளர்கின்ற பிள்ளைகளுக்கு யோகா கலை அவசியம் என்பதற்காக நாங்கள் தான் அவர்களை அங்கு சேர்த்துவிட்டோம். முதல் 3 நாட்கள் என வகுப்புகள் தொடங்கி, 1 வாரம், 10 நாள், 1 மாதம் என நீண்டுகொண்டே போனது. எம்.டெக் படிச்சிட்டு லண்டனில் அதிக சம்பளத்தில் வேலை பார்த்தவள் எனது மகள் கீதா. இளைய மகள் லதா பி.டெக் முடித்திருக்கிறார். எதேதோ காரணங்களை சொல்லி எனது இரு மகள்களுக்கும் அங்கையே பொறுப்புகள் வழங்கபப்ட்டிருக்கிறது. யோகாவில் ஆர்வம் இருந்ததால் ஆரம்பத்தில் நாங்கள் அதற்கு அனுமதி அளித்தோம். நேரம் கிடைக்கும்போது மட்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அவர்களிடமிருந்து எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் போனது. அவர்களை நேரில் சந்திக்கலாம் என சென்றபோது தான் அவர்களின் அலங்கோல காட்சிகளை கண்டோம்.
நான் தான் கடவுள் என்று சொல்லியும், மோட்சம் தருவதாக கூறி ஆசை வார்த்தை காட்டி அவர்களை மூளை சலவை செய்து சாமியார்களாக ஆக்கிவிட்டனர். எங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைத்து பேரன் பேத்திகளை கொஞ்சி மகிழ்ச்சியாக வாழனும்னு நினைத்தோம். ஆனால் பாவிகள் இப்படி செய்துவிட்டார்கள் என கண்ணீருடன் தெரிவித்தார் காமராஜ்.
எங்கள் சொத்துக்களை அபகரிக்க ஈஷா மையம் திட்டம் தீட்டியிருக்கு. அதனால் தான் எங்கள் பிள்ளைகளை அரை போதையில் வைத்து அடிமை போல நடத்தி வருகின்றனர். அம்மாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் ஏதோ ஊக்க மருந்து போல கொடுக்கிறார்கள். அதனை சாப்பிடவைத்துவிட்டு 30 கி.மீ வரை நடக்க வைக்கிறார்கள். எனது மகள்களை மிட்டுத்தரக்கோரி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அங்கேயும் அவர்களது அராஜகம்தான். எங்கள் பிள்ளைகளிடத்தில் பேசுவதற்கு கூட அனுமதிக்க மறுக்கிறார்கள். அங்கே படிக்கும் குழந்தைகளுக்கு ' நைட்ரஸ் ஆக்ஸைடு' கொடுக்கப்படுகிறது. அதுவும் ஒருவகையான போதை வஸ்துள்ள பொருள்தான். இதனை உட்கொண்ட பிறகு அவர்கள் யாரை பார்த்தாலும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்கள் கோமா நிலைக்கு செல்வதற்கு கூட வாய்பிருக்கிறது. இது மட்டுமல்ல அங்கு சிறுநீரக திருட்டும் நடந்துவருகிறது. எங்கள் பிள்ளைகள் மட்டுமல்ல இன்னும் எத்துனையோ பெண்கள், குழந்தைகள் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் மீட்கவேண்டும். அம்மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காமராஜ் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது "ஆம் இது போன்ற நிறைய புகார்கள் வந்திருக்கிறது. புகார்கள் தொடர்பாக விசாரிக்க அந்த பெண்களை வரச்சொல்லி அழைத்தால் அவர்கள் ஈஷா யோகா மையத்தின் நிர்வாகிகளுடனே வருகிறார்கள். தங்களை யாரும் கட்டாயபப்டுத்தவில்லை, தாங்களாகவே விருபப்பட்டே சன்னியாசி ஆகியிருக்கிறோம் என கூறுகிறார்கள். அப்படியிருக்க சட்டப்படி எந்த நடவடிக்கையும் எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அத்தோடு அந்த புகார் முடிவுக்கு வந்துவிடும்" என தெரிவித்தார்.
ஈஷா மையத்தை பற்றி நன்கு அறிந்தவர்களை சந்தித்து அங்கே சன்னியாசி ஆக வேண்டுமென்றால் என்னென்ன கட்டுப்பாடுகள் உள்ளது என கேட்டோம். அதற்கு "அங்கே சன்னியாசம் எடுக்க விருப்பப்படுகிறவர்கள் முதலில் தங்களது குடும்ப உறவை முறிக்க வேண்டும். அவர்களின் கல்விச்சான்றிதழ்கள் என அவர்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஈஷா மையத்திடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவர்களின் சொத்து, நகைகள் என அனைத்தும் அவர்களது கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு என்ன விதமான பயிற்சிகள் வழங்கப்படுகிறது என்பது தெரியவைல்லை, அதே சமயம் அவர்கள் எப்பொழுதும் அரை போதையில்தான் இருப்பார்கள்" என சிலர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஈஷா மையத்தை சந்திக்க முயற்சித்த போது அவர்கள் அதற்கு முன் வரவில்லை. இருந்த போதிலும் கடுமையான முயற்சிக்கு பிறகு தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டோம். அதற்கு அவர்கள் கூறியது " நாங்கள் யாரையும் இங்கு இருக்க வேண்டும் என கட்டாயபப்டுத்துவதில்லை. அவர்கள் விருப்பப்பட்டால் எப்பொழுது வேண்டுமானாலும் இங்கிருந்து செல்லலாம். பெரும்பாலும் அவர்கள் மேஜர்களாக இருக்கின்றார்கள். காவல்துறையினரின் முன்னிலையில் கூட அவர்கள் தங்கள் பெற்றோருடன் செல்ல மறுக்கின்றனர். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். மற்றபடி காமராஜ் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை" என கூறிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.
ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்ற அனைவரும் சன்னியாசியாக இருக்க வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். ஆனால் ஈஷா யோகா மையத்தின் குருஜி சத்குரு வாசுதேவின் மகள் ராதே தனது காதல் கணவருடன் வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமல்லாது தங்களது இரண்டாம் ஆண்டு திருமண நாளையும் கொண்டாட தயாராகி வருகின்றனர். இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஊருக்குத்தான் உபதேசம் என்பது போலவே இருக்கிறது. இது தவிற இங்கு நடக்கும் பல்வேறு சம்பவங்கள் ரகசியமாகவே இருக்கிறது. அரசு இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதே பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

No comments:
Write comments