வடகிழக்கு ஆசிய நாடுகளான தென்கொரியாவும், வடகொரியாவும் தங்களது ஆயுத பலத்தை நிலைநாட்ட பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது.
அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.
இதன்காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.
அவ்வகையில்,கடந்த மாதம் 19-ம் தேதி கண்டம் விட்டு கண்டம் பாயும் மூன்று ஏவுகணைகளை தனது கிழக்கு கடலோர பகுதியில் அடுத்தடுத்து ஏவி வடகொரியா பரிசோதித்தது.
முன்னதாக, வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து நிறுவவுள்ள ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை (Terminal High Altitude Area Defence (THAAD) system) ஈவிரக்கமற்ற தாக்குதல் மூலம் அழித்து நிர்மூலம் ஆக்குவோம் என வடகொரியா மிரட்டி இருந்தது.
இந்த மிரட்டலை பொருட்படுத்தாமல் இன்று காலை சுமார் 7.50 மணியளவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் மேலும் ஒரு ஏவுகணையை வடகொரியா பரிசோதித்துள்ளது.
வடகொரியாவின் இந்த அடாவடிக்கு அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜப்பான் கடலை நோக்கி இன்று ஏவப்பட்ட இந்த ஏவுகணை பரிசோதனை ஜப்பானின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

No comments:
Write comments