கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் 10 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலி மருத்துவர்கள் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் அசோக்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்குழுவினர் அம்மாவட்டத்தில் உள்ள சூளகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம் போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை போன்ற பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 10 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களின் மருத்துவமனை மற்றும் மருந்தகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதற்குக் காரணம், மாவட்டங்களில் சுகாதாரம் ஒழுங்கு முறையில் இல்லை என்று கூறப்பட்டாலும் மர்ம காய்ச்சலுக்கு சரியான, முறையான சிகிச்சை அளிக்காமல் உயிரிழப்புக்கு காரணம், போலி டாக்டர்களின் சிகிச்சைதான் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள போலி மருத்துவர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய பல குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் கிருஷ்ணகிரியில் மட்டும் 1௦ போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் வரை திருவள்ளூரில் 13 போலி மருத்துவர்கள் பிடிபட்டனர். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து கொடுத்தற்காக 23 மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 162 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,

No comments:
Write comments