மும்பையில் கடலுக்குள் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஹாஜி அலி தர்கா. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய மதகுரு அடக்கம் செய்யப்பட்ட சமாதி அருகே பெண்கள் வருவது பெரும் பாவம் செய்வதற்குச் சமம் என்று கூறி, ஹாஜி அலி தர்கா நிர்வாகம் பெண்களுக்குத் தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து ஜாகியா சோமன், நூர்ஜஹான் நியாஸ் ஆகிய இரு பெண்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இருப்பினும், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தர்காவுக்குள் பெண்கள் நுழைந்து வழிபாடு நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், கடந்த மே மாதம், வழிபாட்டுத் தலங்களில் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து புகழ்பெற்ற கோயில்களில் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்திவரும் ‘பூமட்டா ரன்ராகினி பிரிகேட்’ அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய், ஹாஜி அலி தர்காவுக்குள் நுழைந்தார். எனினும், தர்காவின் மையப் பகுதிக்குள் செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை. இவ்வழக்கில் ஆகஸ்ட் 8ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் வி.எம்.கான்டே மற்றும் ரேவதி மோஹித் டேரே அடங்கிய மும்பை உயர்நீதிமன்ற அமர்வு, ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி உத்தரவிட்டது. மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தர்கா கமிட்டியினர் தெரிவித்துள்ளதால், தங்களது உத்தரவை நடைமுறைப்படுத்த ஆறு வார இடைக்காலத் தடை விதிப்பதாகவும் அப்போது நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதுதொடர்பாக ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை சார்பில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை சார்பில் மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடுகையில், ‘இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான முடிவை அறக்கட்டளை எடுக்கும்’ என்று வாக்குறுதி அளித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘மும்பை உயர்நீதிமன்றம் தனது உத்தரவைச் செயல்படுத்துவதற்கு பிறப்பித்த தடை உத்தரவை வரும் 17ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கிறோம்’ என்றனர். மேலும், அந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையையும் 17ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:
Write comments