ஐதராபாத்தைச் சேர்ந்த ஆராதனா என்ற பெண் உண்ணாநோன்பு இருந்து இறந்த சம்பவம் தொடர்பாக ஜெயின் மதத் தலைவர், எங்களின் மத விவகாரத்தில் யாருக்கும் தலையிட உரிமை இல்லை என்று கூறியுள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் செகந்திராபாத்தில் ஆராதனா என்ற 13 வயது சிறுமி, சென்னையைச் சேர்ந்த மத குருவின் அறிவுரையின்படி ‘சந்தாரா’ என்ற உண்ணாநோன்பு இருந்து உயிர் இழந்தார். இவர் தனது தந்தையின் தொழில் விருத்தி அடைவதற்காக 68 நாட்கள் உண்ணாநோன்பு இருந்துள்ளார்.
இச்சம்பவம் நடந்ததையடுத்து, பெண் குழந்தை உரிமை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இதை எதிர்த்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி, ஆராதானாவின் பெற்றோர் லட்சுமிசந்த், மணிஷா ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, நேற்று ஜைன மதத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், மதத் தலைவர்கள் மற்றும் மத முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
மதக் கூட்டத்தில் இதுதொடர்பாக அதன் தலைவர் மஞ்சிலால் பண்டாரி பேசியதாவது: ஜைன மத விவகாரத்தில் எந்தவித அமைப்புகளோ, காவல்துறையோ தலையிட அவசியமில்லை. மேலும் எங்கள் மத முறை மற்றும் நம்பிக்கைகளை அவமதிக்கும் செயலில் யாரும் ஈடுபடக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது. ஜைன மதத்திற்கென்று சில விதிமுறைகள், பழக்க வழக்கங்கள் உண்டு. அதை பின்பற்றுவதற்கும் எங்களுக்கு உரிமை இருக்கிறது. இதில் மற்றவர்கள் தலையிடுவது பிரச்னையை ஏற்படுத்துகிறது. எங்கள் மத வழக்கத்தின்படி, மக்களின் உடல் திறனை வெளிப்படுவத்துவதற்காக இப்படி உண்ணாநோன்பு இருப்பது வழக்கம். சிறுமி ஆராதனா உண்ணாநோன்பு இருந்தது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பு 34 நாட்கள் உண்ணாநோன்பு இருந்துள்ளார். இந்த முறையும்கூட அவர் 68 நாட்கள் உண்ணாநோன்பை சிறப்பாகத்தான் முடித்துள்ளார். இவர் 41 நாட்கள் பள்ளியும் சென்றுள்ளார். உண்ணாநோன்பு இருந்து 24 மணி நேரம் கழித்துதான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உண்ணாநோன்பு இருந்தபோது அவருக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை. அதனால் இதில் மதத்தை குற்றப்படுத்துவது தவறு என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக குழந்தைகள் நல அமைப்பின் தலைவர் அச்சுதராவ் கூறியதாவது: சிறுமியின் பெற்றோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சிறுமி தானாக உண்ணாநோன்பு இருக்கவில்லை. பெற்றோர் வற்புறுத்தலின்படிதான் உண்ணாநோன்பு இருந்துள்ளார். அதனால் பெற்றோர் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும். இந்தப் பிரச்னையை மதப் பிரச்னையாக பார்க்கக் கூடாது. ஒரு குழந்தையின் உரிமைப் பிரச்னையாக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது மிகுந்த சர்ச்சையை உருவாக்கி வருகிறது.

No comments:
Write comments