லோதா கமிட்டி பி.சி.சி.ஐ. கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு கணக்கு முடக்கம் செய்ய வேண்டும் என்று கூறி ஒரு அறிக்கை அனுப்பியது. இதனால், வெறுப்பான பி.சி.சி.ஐ. பணம் இல்லாமல் கிரிக்கெட் தொடரை நடத்த முடியாது. ஆகையால், நியூசிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படலாம் என்று பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது. இதற்கு பதிலாக வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து நீதிபதி லோதா விளக்கம் அளித்திருந்தார். அதில் ‘‘மாநில கிரிக்கெட் சங்கங்களுக்குத்தான் பணம் ஒதுக்க வேண்டாம் என்று பி.சி.சி.ஐ-க்கு உத்தரவிட்டுள்ளோம் தவிர பி.சி.சி.ஐ-யின் வங்கிக் கணக்கை முடக்கச் சொல்லவில்லை’’ என்றார்.
இந்நிலையில் பி.சி.சி.ஐ. அதிகாரிகள் தங்களை சர்வாதிகாரிகளாக நினைத்துக் கொள்கிறார்கள், விளையாட்டை விட அவர்கள் பெரியவர்கள் கிடையாது என்று நீதிபதி லோதா நேற்று கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து லோதா கூறுகையில் ‘‘பி.சி.சி.ஐ. நிர்வாகிகளை விட கிரிக்கெட்தான் பெரியது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரை அவர்கள் நிறுத்த முடியாது. அவர்கள் போட்டியைக் கட்டாயம் நடத்தியே தீர வேண்டும். லோதா குழுவின் பரிந்துரைகளை அவர்கள் திசைதிருப்ப நினைத்தால், கடவுள்தான் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments